பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணி ஆட்சி .. இதுதான் பிளான்! தமிழக அரசியலில் எதுவும் நடக்கலாம்!
டெல்லி: பீகாரில் நிதீஷ் குமாரின் ஜக்கிய ஜனதா தளத்தை வசப்படுத்திய பாணியில் தமிழகத்தில் திமுகவுடன் பாஜக கூட்டணி அமைக்குமா என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது. அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை என்பதால் எதுவேண்டுமானாலும் நடக்கலாம். ஏனெனில் அதிமுக முதல்வர் வேட்பாளர் விவகாரம் குறித்து பேசிய பொன் ராதாகிருஷ்ணன் வரும் காலங்களில் திமுக, அதிமுக உள்ளிட்ட எந்த கட்சியுடனும் கூட்டணி அமையலாம் என்றார்.
தமிழக பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன் ராதாகிருஷ்ணன், அதிமுக முதல்வர் வேட்பாளர் தேர்வு விவகாரத்தில் குறித்து பேசுகையில் தேர்தலில் கூட்டணி மாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவித்தார்.
இதன் மூலம், ஒத்துவராவிட்டால் அதிமுகவை விட்டு திமுகவுடன் கூட்டணி அமைக்கவும் பாஜக தயார் என்ற நிலையில் இருப்பதை அவரது கருத்து வெளிப்படுத்தியது.. சித்தாந்த ரீதியாக மாறுபட்டு இருந்தாலும் ஏற்கனவே 1999 முதல் 2004 வரை பாஜகவுடன் திமுக கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி உள்ளது. முரசொலி மாறன், டிஆர் பாலு உள்ளிட்டோர் பாஜக கூட்டணியில் மத்திய அமைச்சர்களாக இருந்துள்ளனர்.

பீகார் ஹரியானா திரிபுரா
எனவே அதே பாணியில் திமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. ஏனெனில் பீகாரில் காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் கூட்டணியில் ஆட்சியைமைத்த நிதீஷ்குமாரின் ஜக்கிய ஜனதா தளம் கட்சியை தன் பக்கம் இழுத்து தேர்தலுக்கு பின்னர் கூட்டணி ஆட்சியை பாஜக அமைத்து சாத்தியப்படுத்தி இருக்கிறது. இதேபோல் ஹரியானா மாநிலத்திலும் துஷ்யந்த் சவுதாலாவின் கட்சியுடன் தேர்தலுக்கு பின்னர் கூட்டணி அமைத்து ஆட்சி செய்து வருகிறது. திரிபுராவில் காங்கிரஸ் கட்சியை மொத்தமாக வசப்படுத்தி கம்யூனிஸ்ட் கட்சியை வீழ்த்தி ஆட்சி அமைத்துள்ளது.

மத்திய பிரதேசத்தில் ஆட்சி
கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்களை தேர்தலுக்கு பின்னர் வசப்படுத்தி பாஜக ஆட்சியமைத்துள்ளது. மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து ஜோதிராத்தியா சிந்தியாவை தேர்தலுக்கு பின்னர் தன் பக்கம் ஈர்த்து பாஜக ஆட்சியை கைப்பற்றி உள்ளது. இப்படி பல மாநிலங்களில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற பல அதிரடியான விஷயங்களை செய்துள்ளது பாஜக.

மேற்குவங்கம் தமிழகம்
2021ம் ஆண்டு பாஜகவுக்கு சவால் தரும் மாநிலங்களான தமிழ்நாடு, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடக்கிறது. இரண்டு தேர்தலுக்கும் ஒரே நேரத்தில் நடக்கிறது. சித்தாந்த ரீதியாக பாஜகவிற்கு இந்த இரண்டு மாநிலங்களும் பல ஆண்டுகளாக கடும் சவால்களை தந்துள்ளன. எனினும் மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்து இரண்டாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது பாஜக. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 18 இடங்களில் வென்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை அலற வைத்துள்ளது. அங்கு இந்த முறை எப்படியும் ஆட்சியமைத்தே தீர வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது. அதற்கான அரசியல் சதுரங்க வேட்டையை ஜக கட்சிதமாக செய்து வருகிறது.

படு தோல்விகளே கிடைத்தது
பாஜகவிற்கு மிகமிக சவாலாக உள்ள மாநிலம் என்றால் அது தமிழ்நாடு மட்டுமே. கடந்த 10 ஆண்டுகளில் நடந்த இரண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக கூட்டணி இங்கு படுதோல்வியை மட்டுமே சந்தித்தது. குறிப்பாக கடந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் இந்தியாவின் பல மாநிலங்களில் மிகப்பெரிய வெற்றி பெற்ற பாஜக , தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. அதிமுக, தேனியில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த சூழலில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியை பாஜக தொடருமா அல்லது புதிய கூட்டணி அமைத்து வெற்றிக்கு முயலுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

முதல்வர் வேட்பாளர் அதிருப்தி
ஏனெனில் தமிழக பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன் ராதாகிருஷ்ணன், அதிமுக முதல்வர் வேட்பாளர் தேர்வு விவகாரத்தில் அதிருப்தியை வெளிப்படுத்தினார். கூட்டணி கட்சி முதல்வர் வேட்பாளர், கூட்டணி அறிவிக்கப்பட்ட பின்னர் அறிவிக்கப்பட வேண்டிய விஷயம். தற்போது அதிமுக கூட்டணியில் நாங்கள் இருக்கிறோம். தேர்தல் நெருங்கி வரும் போது சூழ்நிலைகள் மற்றும் பல்வேறு விஷயங்களை அடிப்படையாக கொண்டு கூட்டணி அமைப்பார்கள். தமிழகத்தில் அடுத்து வரும் சட்டசபை தேர்தலில் கூட்டணி மாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

பாஜக திமுக கூட்டணி சாத்தியமா?
பாஜகவை பொறுத்தவரை வரும் காலங்களில் திமுக, அதிமுக உள்ளிட்ட எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்கலாம். தேர்தல் நெருங்கும் போது கட்சியின் தலைமை இதை முடிவு செய்யும். வரும் 2021 சட்டசபை தேர்தலுக்கு பின்னர் தமிழகத்தில் பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணி தான் ஆட்சி அமையும். அது அதிமுகவாக இருக்கலாம். திமுகவாகவும் இருக்கலாம். அல்லது இரண்டு இல்லாத வேறு கட்சிகளாக கூட இருக்கலாம் என்றார். எனினும் அதன்பிறகு அவர் கூட்டணி விவகாரத்தில் தனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக விளக்கம் அளித்தார். திமுகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பே இல்லை என்றும் அதற்கான வாய்ப்புகள் மிக குறைவு என்றும் கூறினார்.












Click it and Unblock the Notifications