உத்தரகாண்ட் மாநிலத்தில் பிப்ரவரி 14-ம் தேதி சட்டசபை தேர்தல்.. இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
டெல்லி: நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிவேகமாக அதிகரித்து வருகிறது. நாட்டின் ஒருநாள் தினசரி பாதிப்பு 1 லட்சத்தை கடந்து விட்டது. இதனால் பல்வேறு மாநிலங்களும் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
நிலைமை இப்படிஇருக்க உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

உத்தரகாண்டில் 14-ம் தேதி தேர்தல்
இந்த நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் பிப்ரவரி 14-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. உத்தரகாண்ட மாநிலத்தில் ஒரே கட்டமாக வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 10-ம் தேதி எண்ணப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்த தொகுதிகள் 690
கொரோனா தொற்று பரவி வருவதால் கொரோனா பரவல் மேலும் அதிகரிக்காத வகையில் கூடுதல் வழிகாட்டு நெறிமுறைகளுடன் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. மொத்தம் 5 மாநிலங்களில் 690 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த 5 மாநிலங்ககளிலும் மொத்தம் 7 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

உத்தரகாண்டில் பாஜக ஆட்சி
மொத்தம் 70 தொகுதிகளை கொண்ட உத்தரகாண்ட் மாநிலத்தில் புஷ்கர் சிங் தாமி தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சியாக காங்கிரஸ் உள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.
அதாவது மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 57 தொகுதிகளை கைப்பற்றி அசுர பலத்துடன் பாஜக ஆட்சியை பிடித்தது.

காங்கிரஸ் அதிசயம் நிகழ்த்துமா?
காங்கிரஸ் 11 இடங்களில் வென்றது. சுயேச்சை வேட்பாளர்கள் 2 இடத்தில் வென்றனர். இந்த முறையும் ஆட்சியை தக்க வேண்டும் என்பதில் பாஜக தீவிரமாக உள்ளது. அதே வேளையில் பாஜகவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று காங்கிரஸ் துடிப்புடன் செயல்பட்டு வருகிறது. தேர்தல் பணிகளை இப்போதே இரு கட்சிகளும் தொடங்கி விட்டன. உத்தரகாண்டை மறுபடி பாஜக தக்க வைக்குமா? அல்லது காங்கிரஸ் அதிசயம் நிகழ்த்துமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications