இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளை மாற்றியமைத்தவர் வாஜ்பாய்... அமைச்சர் ஜெய்சங்கர் புகழாரம்
டெல்லி: முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 96ஆவது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. பாஜக சார்பில் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தலைவர் வாஜ்பாய்.
1924ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதி குவாலியரில் பிறந்த வாஜ்பாய், மூன்று முறை பிரதமராக இருந்துள்ளார். 1996 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இவரது முதல் அரசு 13 நாள்களே நீடித்தது.
அதன் பின்னர் 1998 முதல் 1999 வரை 13 மாத காலம் வாஜ்பாய் பிரதமராக இருந்தார். அதைத்தொடர்ந்து 1999ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டு வரை ஐந்து ஆண்டுகள் பிரதமராக இருந்தார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் முன்னாள் பிரதமர் வாஜ்பாயிக்கு இன்று அஞ்சலி செலுத்தினார்.

உலகம் முழுதும் பயணித்த வாஜ்பாய்
அதன் பின்னர் வாஜ்பாய் குறித்து அமைச்சர் ஜெய்சங்கர் கூறுகையில், "வெளிநாடுகளுடனா இந்தியாவின் ஈடுபாடுகளை, குறிப்பாக ஐரோப்பா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆசியா பிராந்தியங்களில் இருக்கும் நாடுகளுடனான நமது ஈடுபாடுகளை அதிகரிக்க வாஜ்பாய் பல்வேறு பிராந்தியங்களுக்கும் கண்டங்களுக்கும் பயணம் செய்தார்.

சீனாவைக் குறித்த வாஜ்பாய் பார்வை
சீனாவை நாம் பரஸ்பர மரியாதை அடிப்படையில் அணுகுகிறோம். இந்தியாவின் இந்தக் கொள்கை ரீதியான அணுகுமுறையும் வாஜ்பாயின் சிந்தனையையே பிரதிபலிக்கிறது. அண்டை நாடுகளுடன் வாஜ்பாய் நல்ல நட்பைக் கொண்டிருந்தார். இதுமட்டுமின்றி பயங்கரவாதமும் நம்பிக்கையும் எப்போதும் ஒன்றிணைந்திருக்காது என்பதில் அவர் தெளிவாக இருந்தார்.

வாஜ்பாயின் மாபெரும் சாதனை
1998ஆம் ஆண்டு போக்ரானில் அணுசக்தி சோதனைகளை மேற்கொள்ள வாஜ்பாய் எடுத்த முடிவு, நாட்டிற்கு அவர் அளித்த மிக முக்கிய பங்களிப்பு. வாஜ்பாயின் வாழ்க்கையை நாம் திரும்பிப் பார்க்கும்போது, இந்திய வெளியுறவுக் கொள்கையையே முற்றிலுமாக மாற்றியமைத்த தலைவராக அவர் இருக்கிறார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பனிப்போருக்குப் பிந்தைய உலகில், இந்தியா தனது உறவுகளையும் நலன்களையும் முற்றிலுமாக மறுசீரமைக்க வேண்டும் என்ற புரிதல் அவருக்கு இருந்தது.

அமெரிக்காவுடன் இருக்கும் உறவு
அவரது இந்தப் புரிதலே அமெரிக்காவுடன் ஒரு புதிய தொடக்கத்திற்கு வழிவகுத்தது. அதன் பின்னர் இரு தரப்பிலும் உருவான அரசுகள் இந்த உறவைக் கவனமாகப் பார்த்துக்கொண்டன. கடினமான தருணங்களையும் சமாளிக்க இந்த உறவு ஒரு தேசமாக நமக்குத் தேவைப்பட்டது, வாஜ்பாய் போல ஒரு தீர்க்கதரிசியால் மட்டுமே இந்த கூட்டாண்மை எவ்வளவு வெற்றிகரமாகத் தொடரும் என்பதை உணர்ந்திருக்க முடியும்.

தைரியமான முடிவுகளை எடுத்தவர்
தேசியப் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை ஆகியவற்றில் வாஜ்பாய் தைரியமான மற்றும் நுணுக்கமான பல திருத்தங்களை அறிமுகப்படுத்தினார். இப்போது வரை ரஷ்யாவுடனான உறவு நிலையானதாக இருக்க அவரது முயற்சிகளே முக்கிய காரணம்.

ஐக்கிய நாடுகள் சபையில் வாஜ்பாய்
ஏசியன் (ASEAN)அமைப்புடனான இந்தியாவின் உறவு வாஜ்பாயாலேயே வலுப்பெற்றது. அதன் பின்னர், நாடு அதே பாதையில் பயணிக்கத் தொடங்கியது. வெளியுறவுக் கொள்கையில் அவரது பாதையிலேயே நாம் இப்போது சென்று கொண்டிருக்கிறோம். அவரது ஐக்கிய நாடுகள் சபை பயணம் தனித்துவமானது. அதுவரை இல்லாத அளவுக்கு அந்தப் பயணம் இந்தியாவின் முக்கியத்துவத்தைச் சர்வதேச அளவில் உணர்த்தியது " என்றார்.












Click it and Unblock the Notifications