‛‛மோடி திறக்கவில்லை’’.. இடிந்த டெல்லி விமான நிலைய மேற்கூறையின் பின்னணி.. விளக்கிய மத்திய அமைச்சர்
டெல்லி: கனமழை காரணமாக டெல்லி விமான நிலையத்தின் மேற்கூரை சரிந்து விழுந்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. விபத்து நடந்த டெர்மினர் 1-ஐ பிரதமர் மோடிதான் திறந்து வைத்தார் என்று விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், இதனை மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் மறுத்திருக்கிறார்.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 1ம் தேதி தொடங்கும் தென்மேற்கு பருவமழையானது இந்தியாவில் 70% மழை தேவையை பூர்த்தி செய்துவிடும். அந்த வகையில் இந்த ஆண்டு முன்கூட்டியே மே மாதம் 30ம் தேதி இந்த பருவமழை தொடங்கியது. கேரளாவில் தொடங்கிய இந்த மழை கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி மத்திய இந்தியா வரை வந்திருக்க வேண்டும். ஆனால், கடந்த சில நாட்களாக டெல்லி உட்பட வட மாநிலங்களில் கடும் வெயில் வாட்டி எடுத்தது.

வெப்ப அலை காரணமாக மார்ச் 1 தொடங்கி ஜூன் 20ம் தேதி வரை வட மாநிலங்களில் நாடு முழுவதும் 143 பேர் பலியாகியுள்ளனர். 41,789 பேர் ஹீட் ஸ்ட்ரோக் எனப்படும் வெப்ப பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். டெல்லி மக்கள் குடிநீர் முறையாக கிடைக்காததால் கடும் நெருக்கடியை சந்தித்தனர்.
இப்படி இருக்கையில் நேற்றிரவு தொடங்கி இன்று அதிகாலை வரை பெய்த கனமழை காரணமாக டெல்லியில் பல்வேறு இடங்களில் மழைநீர் வெள்ளம் போல தேங்கியிருக்கிறது. இதனால் சில பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டிருக்கிறது. மேற்கு டெல்லியில் ஹரி நகர், பிகாஜி காமா பிளேஸ் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் வெள்ளமாக தேங்கி வீடுகளுக்குள் புகுந்திருக்கிறது. தாழ்வான பகுதிகளில் நிற்க வைக்கப்பட்டிருந்த கார்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன.
மொத்தமாக சராசரியாக 15 மி.மீ அளவுக்கு மழை பொழிந்திருக்கிறது. லோதி காலணியில் 9.6 மி.மீ, ரிட்ஜ் பகுதியில் 6.2 மி.மீ என பல பகுதிகளில் வேறுபட்ட அளவில் மழை பெய்திருக்கிறது. மழை காரணமாக வெப்பநிலை 4 டிகிரி வரை குறைந்திருக்கிறது. இந்த மழை மேலும் 4 நாட்கள் வரை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது.
விமான நிலைய மேற்கூரை: டெல்லி சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல் 1-ன் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. அதிகாலை 5.30 மணிக்கு இந்த விபத்து நடந்திருக்கிறது. பயணிகளை அழைத்து செல்வதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் மீது இந்த கூரை விழுந்ததால் கார்கள் அப்பளம் போல நொருங்கியுள்ளன. சம்பவ இடத்தில் தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியான நிலையில் தற்போது இந்த உயிரிழப்பு எண்ணிக்கை 3ஆக அதிகரித்துள்ளது.
விபத்து நடந்த பகுதியை மத்திய விமான போக்குவரத்துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்திருக்கிறார். பின்னர் செய்தியாரகளிடம் பேசிய அவர், இந்த விமான முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கவில்லை என்று கூறியுள்ளார்.
முன்னதாக, கடந்த மார்ச் மாதம் இந்த விமான நிலையத்தின் விரிவாக்கப்பட்ட டெர்மினல் 1-ஐ பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்ததாக ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது. இதனை மேற்கோள் காட்டி எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடியை விமர்சிக்க தொடங்கின. சோஷியல் மீடியாக்களில் இது குறித்த புகைப்படங்கள் ட்ரெண்டாகின. இப்படி இருக்கையில்தான் மத்திய அமைச்சர் "பிரதமர் மோடி டெர்மினல் 1-ஐ திறந்து வைக்கவில்லை" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications