அடேங்கப்பா.. 5 ஆண்டில் வங்கிகளில் ரூ.9.91 லட்சம் கோடி வராக்கடன் தள்ளுபடி!மத்திய நிதி அமைச்சர் தகவல்
டெல்லி: இந்தியாவில் கடந்த 2018 முதல் 2022ம் ஆண்டு வரை கடந்த 5 ஆண்டுகளில் மொத்தம் ரூ.9 லட்சத்து 91 ஆயிரத்து 640 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என நிதித்துறையின் மத்திய இணையமைச்சர் பகவத் கே காரத் கூறினார்.
Recommended Video
நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 18 ம் தேதி துவங்கியது. அன்று முதல் லோக்சபா, ராஜ்யசபாக்களின் செயல்பாடுகள் முறையாக நடைபெறவில்லை.
விலைவாசி உயர்வு, பணவீக்கம் குறித்து விவாதிக்ககோரி எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் இரு அவையின் செயல்பாடுகளும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து 27 எம்பிக்கள் வரை இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
ராஜ்யசபா: திமுகவின் 6 எம்.பிக்கள் உட்பட 19 பேர் அதிரடி சஸ்பெண்ட்- ஒருவாரம் சபைக்கு வர தடை!
மத்திய அமைச்சர் விளக்கம்
இதற்கிடையே கடந்த திங்கட்கிழமை விலைவாசி உயர்வு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசு ஒப்புக்கொண்டது. மேலும் எம்பிக்களின் இடைநீக்கமும் திரும்ப பெறப்பட்டது. மேலும் கடந்த திங்கட்கிழமை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் லோக்சபாவில் இந்திய பொருளாதாரம், பணவீக்கம், விலைவாசி உயர்வு குறித்து விளக்கம் அளித்தார்.
நிதித்துறை இணையமைச்சர் பதில்
இதற்கிடையே இந்த கூட்டத்தொடரில் எம்பிக்களின் கேள்விகளுக்கு மத்திய அமைச்சர்கள் தங்கள் துறை சார்ந்து பதில்கள் அளித்து வருகின்றனர். அந்த வகையில் இந்தியாவில் வங்கிகளில் வராக்கடன் தள்ளுபடி குறித்து நாடாளுமன்றத்தின் ராஜ்யசபாவில் கேள்வி கேட்கப்பட்டு இருந்தது. இதற்கு நிதித்துறை இணையமைச்சர் பகவத் கே காரத் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார். அதில் உள்ள அம்சங்கள் வருமாறு:
ரூ.9.91 லட்சம் கோடி
கடந்த 2017-18ம் நிதியாண்டு முதல் 2021-22 நிதியாண்டு வரை 5 ஆண்டுகளில் மொத்தம் ரூ. 9 லட்சத்து 91 ஆயிரத்து 640 கோடி வங்கி வராக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் கடந்த 2017-18 ல் ரூ.1.61 லட்சம் கோடியாக இருந்த வங்கி வராக்கடன் தள்ளுபடி 2018-19ல் ரூ.2.36 லட்சம் கோடியாக அதிகரித்தது. இது கடந்த 2019-20ம் ஆண்டில் ரூ.2.34 லட்சம் கோடியாகவும், 2020-21ல் ரூ.2.02 லட்சம் கோடியாகவும், 2021-22ல் ரூ.1.57 லட்சம் கோடியாகவும் குறைந்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் வேண்டுமென்றே கடனை திருப்பி செலுத்தாதவர்களின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்து 306 ஆக இருந்தது. இதில் அதிகபட்சமாக 2020-21ல் மட்டும் 2 ஆயிரத்து 840 பேர் கடனை திரும்ப செலுத்தாமல் இருந்துள்ளனர்.
கடன் செலுத்தாதவர்கள் யார் யார்?
இதில் வெளிநாட்டுக்கு தப்பிச்சென்ற வைர வியாபாரி மெஹுல் சோக்சி அதிகளவு கடன் தொகையை நிலுவையில் வைத்து ஓடிவிட்டார். அவரது கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனம் ரூ.7 ஆயிரத்து 110 கோடியை வங்கிகளுக்கு நிலுவையில் வைத்துள்ளது. எரா இன்ப்ரா இன்ஜினியரிங் நிறுவனம் ரூ.5,879 கோடியும், கான்காஸ்ட் ஸ்டீல் அண்ட் பவர் லிமிடெட் ரூ.4,107 கோடியும் செலுத்த வேண்டி உள்ளது. ஆர்இஐ அக்ரோ லிமிடெட் மற்றும் ஏபிஜி சிப்யார்ட் ஆகியவை முறையே ரூ.3,984 கோடி, ரூ.3,708 கோடி கடன் வாங்கி செலுத்த வேண்டி உள்ளது. மேலும் பிராஸ்ட் இன்டர்நேஷனல் லிமிடெட் ரூ.3,108 கோடி, வின்சம் டயமண்ட்ஸ் அண்ட் ஜூவல்லரி ரூ.2,671 கோடி, ரோட்டோமேக் குளோபல் பிரைவேட் லிமிடெட் ரூ.2,481 கோடி, கோஸ்டல் ப்ராஜெக்ட்ஸ் லிமிடெட் ரூ.2,311 கோடி, குடோஸ் கெமி ரூ.2,082 கோடி கடன் செலுத்த வேண்டும் என கூறியுள்ளார்.