ஜெயிலுக்கு போக ரெடியா இருங்க.. ஆம் ஆத்மி கட்சியினரை அதிரடியாக எச்சரித்த கெஜ்ரிவால்! என்னாச்சு?
டெல்லி : ஜெயிலுக்குப் போக தயாராக இருக்க வேண்டும், யாரேனும் சிறைக்குச் செல்ல பயந்தால் கட்சியை விட்டு வெளியேறலாம் என ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால், தனது கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
ஆம் ஆத்மி கட்சிக்கு தேசிய கட்சிக்கான அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் நேற்று வழங்கியது. கட்சி தொடங்கப்பட்டு மிகக்குறைந்த காலத்திலேயே 2 மாநிலங்களில் ஆட்சியமைத்து, தேசியக் கட்சி எனும் அந்தஸ்தைப் பெற்றுள்ளது ஆம் ஆத்மி. இந்தச் சாதனையை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் கொண்டாடுவதற்காக கட்சி அலுவலகத்துக்குச் சென்ற அரவிந்த் கெஜ்ரிவால், இதுகுறித்து, கட்சினர் மத்தியில் பெருமிதத்தோடு பேசியுள்ளார்.

தேர்தல் ஆணைய விதிகளின்படி, ஒரு கட்சி நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாக இருந்தால், அது தேசியக் கட்சியாகக் கருதப்படும். அல்லது, 4 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலில் 6 சதவீத வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும். மக்களவை தேர்தலில் 3 மாநிலங்களில் 2 சதவீத இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். இதில் ஏதேனும் ஒரு விதியை பூர்த்தி செய்யும் கட்சிக்கு தேசிய அங்கீகாரம் வழங்கப்படும்.
டெல்லி மற்றும் பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சியில் உள்ளது. மேலும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற கோவா சட்டமன்றத் தேர்தலில் 6.77% வாக்குகளைப் பெற்றது. கடந்த ஆண்டு நடைபெற்ற குஜராத் சட்டசபை தேர்தலில் அக்கட்சி 5 இடங்களில் வெற்றி பெற்றது. இந்நிலையில் ஆம் ஆத்மிக்கு தேசிய கட்சி அங்கீகாரம் வழங்கி தலைமை தேர்தல் ஆணையம் நேற்று உத்தரவு பிறப்பித்தது.
இதுகுறித்து கட்சி நிர்வாகிகளிடம் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சிக்கு இவ்வளவு குறுகிய காலத்தில் தேசியக் கட்சி அந்தஸ்து கிடைத்திருப்பது மிகப்பெரிய அதிசயம். நாட்டின் கோடிக்கணக்கான மக்கள் இப்போது ஆம் ஆத்மி கட்சியின் மீது நம்பிக்கை கொண்டு, நமக்கு மிகப்பெரிய பொறுப்பை வழங்கியுள்ளனர். இறைவனின் ஆசீர்வாதத்துடன் இந்த பொறுப்பை முழு நேர்மையுடன் நிறைவேற்றுவோம் எனத் தெரிவித்துள்ளார்.
சிறையில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களான சத்யேந்தர் ஜெயின் மற்றும் மணீஷ் சிசோடியாவை நினைவுகூர்ந்த கெஜ்ரிவால், யாரேனும் சிறைக்கு பயந்தால் கட்சியை விட்டு வெளியேறலாம் என்றும், இந்தியாவை உலகின் நம்பர் ஒன் நாடாக மாற்ற மக்கள் ஆம் ஆத்மி கட்சியில் சேர வேண்டும் என்றும் தொண்டர்கள் மத்தியில் பேசியுள்ளார்.
மேலும், நாட்டின் முன்னேற்றத்தைத் தடுக்க விரும்பும் அனைத்து தேசவிரோத சக்திகளும் ஆம் ஆத்மிக்கு எதிரானவை. தேச விரோத சக்திகளுக்கு எதிராகப் போராடுவதால் ஆம் ஆத்மி கட்சியினர் சிறைக்குச் செல்ல தயாராக இருங்கள். நேர்மை, தேசபக்தி மற்றும் மனிதநேயம் ஆகியவை ஆம் ஆத்மி கட்சி சித்தாந்தத்தின் மூன்று தூண்கள் என்பதை மறந்துவிடாதீர்கள் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications