ஓமிக்ரான் கொரோனா வேரியண்ட் பரவல்.. பொது இடங்களில் மாஸ்க் அணிய மத்திய அரசு அறிவுரை
டெல்லி: கொரோனா பரவலை தடுக்க பொது இடங்களில் பொதுமக்கள் மீண்டும் மாஸ்க் அணிய வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
சீனாவில் புதிய வகை ஓமிக்ரான் வேரியண்ட்டான பிஎப் 7 வேகமாக பரவி வருகிறது. இதனால் சீனாவில் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பியுள்ளனர். மயானங்களிலும் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் புதிய வகை ஓமிக்ரான் வேரியண்ட் குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா மக்களவையில் கூறியிருப்பதாவது: கொரோனா பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் பொது இடங்களில் மாஸ்க் அணிவதை அந்தந்த மாநில அரசுகள் கட்டாயமாக்க வேண்டும்.
கடந்த 24 மணி நேரம்.. தமிழ்நாட்டில் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு.. சென்னையில் மட்டும் இருவருக்கு உறுதி!
புதிய கொரோனா வைரஸ் பரவல்
சீனாவில் புதிய கொரோனா வைரஸ் பரவலை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா தொற்று விதிகம் குறைந்துள்ளது. புதிய வேரியண்ட்டை கண்டுபிடிக்கும் ஜீனோம் பரிசோதனையை மாநில அரசுகள் அதிகரிக்க வேண்டும். வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகளுக்கு ரேண்டம் கொரோனா பரிசோதனை தொடங்கியுள்ளோம்.
சமூக இடைவெளி
பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். தற்போது பண்டிகை காலம் வரவிருப்பதால் அனைவரும் பொது இடங்களில் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும். உலக அளவில் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார். அது போல் இந்திய மருத்துவச் சங்கம் பொது மக்களுக்கு சில விஷயங்களை பரிந்துரை செய்துள்ளது.
8 முக்கிய அம்சங்கள்
அவை யாதெனில்:
1. பொது இடங்களில் மக்கள் மாஸ்க் அணிந்து கொள்ள வேண்டும்.
2. சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் வேண்டும்
3. சோப்பு அல்லது சானிடைசர் போட்டு கை கழுவுதலை பின்பற்ற வேண்டும்.
4. திருமணங்கள், அரசியல், சமூக பொதுக் கூட்டங்களில் கலந்து கொள்வதை தவிர்க்க வேண்டும்
5. வெளிநாடுகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்
6. காய்ச்சல், தொண்டை கரகரப்பு, இருமல், வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
7. பூஸ்டர் டோஸ் உள்பட கொரோனா தடுப்பூசிகளை எவ்வளவு சீக்கிரமாக போட்டுக் கொள்ள முடியுமோ போட்டுக் கொள்ள வேண்டும்.
8. அரசு வகுக்கும் வழிகாட்டும் நெறிமுறைகளை எப்போதும் பின்பற்ற வேண்டும்
மேற்கண்ட 8 முக்கிய விஷயங்களை இந்திய மருத்துவ சங்கம் அறிவுறுத்தியுள்ளது.
சீனாவில் கொரோனா தொற்று வேகம்
சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா மற்ற நாடுகளுக்கும் பரவிய நிலையில் இந்தியாவிலும் பரவியுள்ளது. இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து டெல்லியில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது கொரோனா நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.
மத்திய அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு மத்திய அமைச்சர் மன்சுக் தனது ட்விட்டர் பக்கத்தில், கொரோனா இன்னும் முடியவில்லை, அனைத்து மாநிலங்களும் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். எந்த ஒரு சூழலையும் சமாளிக்க தயாராக இருக்கிறோம் என்றார். இந்தியாவில் புதிய வேரியண்ட் பிஎப் 7 பரவியதை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று கொரோனா தடுப்பு ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. முன்னதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரையை நடத்தி வருகிறார். இந்த பயணத்தில் கொரோனா நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என மன்சுக் மாண்ட்வியா ராகுலுக்கு கடிதம் எழுதியுள்ளார்.