மூக்கு வழியே கொரோனா தடுப்பு மருந்து- பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்!
டெல்லி: கொரோனா பரவலைத் தடுப்பதற்கு மூக்கு வழியே கொரோனா தடுப்பு மருந்து வழங்க பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.
2019-ம் ஆண்டு உலகை ஆட்டுவிக்க தொடங்கிய கொரோனா தொற்றுப் பரவல் இன்னமும் ஓய்ந்தபாடில்லை. உலகின் பல நாடுகளில் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

நமது நாட்டில் இன்று காலையுடனான 24 மணிநேரத்தில் 4,417 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனா சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 52,336; நேற்று மட்டும் 6,032 பேர் குணமடைந்துள்ளனர். நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு விகிதம் 1.20 சதவீதம் ஆகும்.
கொரோனா தடுப்பூசியானது 2 தவணைகளாகப் போடப்படுகின்றன. பூஸ்டர் தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது. இந்தியாவில் இன்று காலை 7 மணி நிலவரப்படி 213.72 கோடிக்கும் அதிகமாக அதாவது 2,13,72,68,615 கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. 12-14 வயதிற்குட்பட்டோருக்கான கொவிட்-19 தடுப்பூசியானது கடந்த மார்ச் மாதம் முதல் செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை, ஏறத்தாழ 4.04 கோடிக்கும் அதிகமான அதாவது 4,04,84,204 இளம் பருவத்தினருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனவால் குணமடைந்தோர் விகிதம் 98.69 சதவீதமாக உள்ளது. கொரோனா காலத்தில் இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,38,86,496.
நமது நாட்டில் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு, பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மூக்கு வழியே கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. கடந்த ஜூன் மாதம் 7-ந் தேதி நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றுகையில், நாசி வழியாக செலுத்தும் தடுப்பூசிகள் குறித்தும் நாம் ஆராய்ச்சி செய்து வருகிறோம் என குறிப்பிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து ஐநா சபையில் பேசிய பிரதமர் மோடி, இந்திய விஞ்ஞானிகள் கொரோனாவுக்கு நாசி மூலம் செலுத்தும் தடுப்பு மருந்து தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளனர் எனவும் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் மூக்கு வழியே செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்து ஒன்றை முன்பை கிளைன்மார்க் நிறுவனம், கனடாவின் சனோடைஸ் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கியது. மூக்கு வழியேயான இந்த மருந்தை 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் பயன்படுத்தலாம். இதை இந்தியாவில் தயாரித்து விற்பனை செய்ய இந்திய பொதுமருந்து கட்டுப்பாட்டு மற்றும் முறைப்படுத்துதல் ஜெனரல் அனுமதி வழங்கி இருந்தது.
தற்போது பாரத் பயோடெக் நிறுவனமும் மூக்கு வழியே செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்தை தயாரித்துள்ளது. இந்த மருந்தை அவசரகாலத்துக்கு பயன்படுத்திக் கொள்ள இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி கொடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications