‛பணிவுடன் ஏற்கிறேன்’.. வாஜ்பாயை நினைத்து உருகிய எல்கே அத்வானி! ‛பாரத ரத்னா’ விருதால் மோடிக்கு நன்றி
டெல்லி: பாஜகவின் மூத்த தலைவரான எல்கே அத்வானிக்கு ‛பாரத ரத்னா' விருது வழங்கப்படும் என பிரதமர் மோடி இன்று அறிவித்தார். விருது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் எல்கே அத்வானி, மறைந்த பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயை நினைவுப்படுத்தி உருக்கமாக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவர் எல்கே அத்வானி. ஆர்எஸ்எஸ் அமைப்பில் செயல்பட்ட இவர் ஜனசங்கத்தில் செயல்பட்டார். அதன்பிறகு பாஜக கட்சி உருவாக்கப்பட்டதில் முக்கிய தலைவராக இருந்தார். அதன்பிறகு பாஜகவின் தலைவராக இருந்து இந்தியா முழுவதும் கட்சியை வளர்த்தவர்களில் இவர் முக்கியமானவர்.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான 1990ல் அத்வானி நடத்திய ‛‛ரத யாத்திரை'' பாஜகவை அடுத்தக்கட்டத்துக்கு அழைத்து சென்றது. இவரது இந்த ரத யாத்திரை தான் தேசிய அரசியலில் பாஜகவை அசைக்க முடியாத சக்தியாக மாற காரணமாகி உள்ளது என்றால் மிகையாகாது.
அத்வானி மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயுடன் மிகவும் நெருக்கமாக செயல்பட்டார். மத்திய அமைச்சராகவும், துணை பிரதமர் பதவியையும் அத்வானி வகித்துள்ளார். தற்போது அவருக்கு 96 வயது உள்ளது. வயது முதிர்வு காரணமாக அவர் ஓய்வில் உள்ளார். இந்நிலையில் தான் எல்கே அத்வானிக்கு இந்தியாவின் உயரிய விருதான ‛பாரத ரத்னா' விருது வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி இன்று அறிவித்தார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛எல்கே அத்வானி ஜிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளதை பகிர்ந்து கொள்வதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. நாட்டின் மிகப்பெரிய இந்த கவுரவம் குறித்து அத்வானியிடம் பேசி எனது வாழ்த்துக்களை தெரிவித்தேன். நம் காலத்தில் மிகவும் மதிக்கப்படும் அரசியல்வாதிகளில் ஒருவராக அத்வானி ஜி உள்ளார். இந்தியாவின் வளர்ச்சிக்கு அவர் செய்த பங்களிப்பு மகத்தானது.
அடிமட்ட தொண்டனில் தொடங்கி நமது நாட்டின் துணை பிரதமராக உயர்ந்தவர். உள்துறை அமைச்சராகவும், தகவல் தொடர்பு துறை அமைச்சராகவும் சிறப்பாக பணியாற்றினார். அவரது நாடாளுமன்ற விவாதங்கள் முன்னுதாரணமாக இருந்துள்ளன. மேலும் அத்வானி தேசிய ஒருமைப்பாடு மற்றும் கலாச்சார மறுமலர்ச்சியை மேம்படுத்துவதற்கு இணையற்ற முயற்சிகளை மேற்கொண்டவர்.
அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட இந்த தருணம் எனக்கு மிகவும் உணர்ச்சி மிகுந்தது. அவருடன் பழகுவதற்கும், அவரிடமிருந்து கற்றுக்கொள்வதற்கும் எண்ணற்ற வாய்ப்புகள் கிடைத்ததை நான் எப்போதும் எனது பாக்கியமாகக் கருதுவேன்" என கூறியிருந்தார்.
எல்கே அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளதை பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர். மேலும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வீரப்பமொய்லி உள்பட பிற கட்சி தலைவர்களும் இந்த விருது அறிவிப்பை வரவேற்றுள்ளனர். இந்நிலையில் தான் தனக்கு ‛பாரத ரத்னா' விருது வழங்கப்பட்டுள்ளதற்கு உருக்கமாக அத்வானி நன்றி தெரிவித்துள்ளார். மேலும் அவர் முக்கிய தலைவர்களை நினைவு கூர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக அத்வானி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ‛‛பாரத ரத்னா விருது என்பது ஒரு நபராக தனக்கு கிடைத்த மரியாதை மட்டுமல்ல. எனது லட்சியங்களுக்கும், கொள்கைகளுக்கும் கிடைத்த மரியாதையாக கருதுகிறேன். இன்று எனக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதை பணிவுடனும், நன்றியுடனும் ஏற்றுக்கொள்கிறேன்.
இந்த வேளையில் எனது குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும், குறிப்பாக எனது அன்பு மனைவி கமலாவையும் நினைத்து பார்க்கிறேன். அவர்கள் அனைவரும் எனது வாழ்க்கையின் வலிமையாக இருந்துள்ளனர். நான் 14 வயதில் ஆர்எஸ்எஸ்ஸில் தன்னார்வ தொண்டராக சேர்ந்தேன். அன்று முதல் எனக்கு ஒதுக்கப்பட்ட பணிகளின் மூலம் நாட்டுக்கு அர்ப்பணிப்பு மற்றும் தன்னலமற்ற சேவையை செய்தேன்.
இந்த வேளையில் என்னுடன் நெருக்கமாக பணியாற்றிய பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா மற்றும் அடல் பிஹாரி வாஜ்பாய் இருவரையும் நன்றியுடன் நினைவு கூர்கிறேன். அதோடு ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடிக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மகத்தான நமது நாடு புகழின் உச்சத்திற்கு முன்னேறட்டும்'' என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications