டெல்லியில் பெரும் பதற்றம்.. டிராக்டர் பேரணியில் பங்கேற்றுள்ள ஏராளமான தமிழக விவசாயிகள்
டெல்லி: குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் டிராக்டர் பேரணியில் தமிழக விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர். அவர்கள் உத்தரப்பிரதேச மாநில எல்லையை ஒட்டி காசிப்பூர் பகுதியில் கலந்து கொண்டுள்ளனர்.
டெல்லியின் வெளிவட்ட சாலைகளான சிங்கு, திக்ரி, காஜிபூர், பல்வால், ஷாஜகான்பூர் ஆகிய 5 எல்லைகளில் இருந்து டிராக்டர்கள் பேரணி நடத்த விவசாயிகளுக்கு டெல்லி போலீசார் அனுமதி அளித்திருந்தனர். 100 கிமீ தூரம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட இந்த பேரணிக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இந்நிலையில் குடியரசு தின டிராக்டர் பேரணியில் நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் பங்கேற்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் அமைப்பினர் அறைகூவல் விடுத்திருந்தனர். அதன் பேரில் இந்தியாவின் பல மாநில விவசாயிகளும் டிராக்டர்களுடன் டெல்லிக்கு படையெடுத்தனர். சாரைசாரையாக பஞ்சாப், ராஜஸ்தான், ஹரியானா, உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, தமிழகம் என பல மாநிலங்களில் இருந்து விவசாயிகள் டெல்லிக்கு வந்தடைந்தனர்.
டெல்லியின் காசிப்பூர் எல்லையில் தமிழக விவசாயிகள் வாகனங்களுடன் பேரணியில் பங்கேற்க குவிந்து இருந்தனர். இந்நிலையில் இன்று காலை குடியரசு தினவிழா ஒருபக்கம் டெல்லியில் நடந்து கொண்டிருந்த நிலையில், மறுபககம், டிராக்டர்களுடன் விவசாயிகள் பேரணியில் இறங்கினர்.
ஹரியானா டெல்லி எல்லையில் உள்ள சிங்கு பகுதியில் டிராக்டர்களுடன் பேரணியில் பங்கேற்ற விவசாயிகளை திடீரென போலீசார் மாற்றுப்பாதையில் செல்லுமாறு கூறினர். இதனை ஏற்க மறுத்த விவசாயிகள், தடுப்புகளை உடைத்து வேகமாக முன்னேறினர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீசியதுடன், தடியடி நடத்தினர். இதனால் பெரும் வன்முறை களமாக சிங்கு எல்லை மாறி உள்ளது. அதேநேரம் ம்ற்ற நான்கு எல்லை பகுதிகளில் பெரிய வன்முறைகள் ஏற்பட்டதாக இதுவரை தகவல்கள் இல்லை.