பீகார்: ஜேடியூவை அழிக்க முயற்சித்ததா பாஜக? நிதிஷ்குமாருக்கு ரவிசங்கர் பிரசாத் சரமாரி பதிலடி!
டெல்லி: ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியூ) கட்சியை பாரதிய ஜனதா கட்சி அழிக்க முயற்சித்ததால் கூட்டணியில் இருந்து விலகியதாக நிதிஷ்குமார் கூறியதை பாஜகவின் மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
பாஜகவுடனான கூட்டணியை விட்டு வெளியேறுவதாக அறிவித்த ஜேடியூ தலைவரான நிதிஷ்குமார், தமது முதல்வர் பதவியையும் ராஜினாமா செய்தார். மேலும் ஆர்ஜேடி-காங்கிரஸ்-இடதுசாரிகளுடன் இணைந்து புதிய கூட்டணி ஆட்சியை அமைக்க உள்ளார் நிதிஷ்குமார்.
புதிய ஆட்சி அமைப்பதற்காக ஆளுநர் பாகு சவுகானை ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவுடன் நிதிஷ்குமார் இன்று சந்தித்தார். அப்போது 160 எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதத்தையும் ஆளுநரிடம் நிதிஷ்குமார் கொடுத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிதிஷ்குமார், பாஜகவானது ஜேடியூவை அழிக்க நினைக்கிறது. அப்படி அழிக்க முயற்சித்த காரணத்தால் கூட்டணியைவிட்டு வெளியேறி உள்ளோம். இப்போது 7 கட்சிகளின் ஆதரவுடன் புதிய ஆட்சி அமைக்க உள்ளோம் என்றார். மேலும் மொத்தம் 164 எம்.எல்.ஏக்கள் தமக்கு ஆதரவாக உள்ளனர் என்றார் நிதிஷ்குமார்.
இப்புதிய கூட்டணி ஆட்சி அமைவதை ஜேடியூ,ஆர்ஜேடி தொண்டர்கள் பீகார் முழுவதும் பட்டாசுகள் வெடித்து கொண்டாடி வருகின்றனர். பாட்னாவில் இரு கட்சி தலைமை அலுவலகங்களிலும் உற்சாகமும் மகிழ்ச்சியும் கரை புரண்டோடுகிறது.
நிதிஷ்குமாரின் இந்த கருத்துக்கு மறுப்பு தெரிவித்து பாஜகவின் மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் எம்.பி. கூறியதாவது: கூட்டணியைவிட்டு வெளியேறிய நிதிஷ்குமார், ஜேடியூவை பாஜக அழிக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். நிதிஷ்குமாரை பாஜகதான் பல முறை மத்திய அமைச்சராக்கியது. நிதிஷ்குமாரை முதல்வராக்கியதும் பாஜகதான். 2015-ம் ஆண்டு ஆர்ஜேடியுடன் கூட்டணி வைத்ததை ஏன் மறுபரிசீலனை செய்தார் நிதிஷ்குமார்? 2017-ல் பாஜகவுடன் ஏன் மீண்டும் கூட்டணி அமைத்தார் நிதிஷ்குமார்?
பீகார் மக்கள் தேர்தலில் வழங்கிய முடிவை நிதிஷ்குமார் மதிக்கவில்லை. பிரதமர் மோடியின் பெயரைப் பயன்படுத்திதான் நிதிஷ்குமார் வென்றார். பாஜகதான் ஜேடியூவை அழிக்க நினைக்கிறது; முயற்சிக்கிறது என்பது ஆதாரமற்ற அபத்தமான குற்றச்சாட்டு. இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறினார்.
மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் கூறுகையில், பீகாரில் உருவாகியுள்ள மெகா கூட்டணி சந்தர்ப்பவாத கட்சிகள் நிறைந்த கூட்டணி. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நம்பிக்கையை சிதைத்துவிட்டார் நிதிஷ்குமார் என்றார்.
கூட்டணியில் இடம்பெறும் கட்சிகளை பாஜக அழித்துவிடும் என்பதுதானே வரலாறு.. தேஜஸ்வி யாதவ் பொளேர் அட்டாக்