சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு.. பிரதமர் மோடியை சந்திக்கும் பீகார் முதல்வர் நிதிஷ்குமார்!
டெல்லி: சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பீகார் முதல்வர் நிதிஷ்குமார் நாளை மறுநாள் பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார். இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.
விரைவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை இருந்து வருகிறது.

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு
காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், தமிழ்நாட்டிலும் பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட பலர் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரி வருகின்றனர். மக்கள்தொகை கணக்கெடுப்பில் எஸ்சி மற்றும் எஸ்.டி பிரிவு மக்களைத் தவிர வேறு பிரிவு மக்களைச் சாதிவாரியாகக் கணக்கிடக் கூடாது என்று கொள்கை முடிவு எடுத்துள்ளதாக அண்மையில் மத்திய அரசு கூறியது.

நிதிஷ்குமார் பேட்டி
இந்தநிலையில் ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவரும், பீகார் மாநில முதல்வருமான நிதிஷ்குமார் சாதிவாரி இடஒதுக்கீடு கோரிக்கை தொடர்பாக 10 கட்சிகளின் தலைவர்கள் குழுவுடன் நாளை மறுநாள் பிரதமர் மோடியை சந்தித்து கோரிக்கை விடுக்க உள்ளார். இது தொடர்பாக நிதிஷ்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:- 0 கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய ஒரு குழு, சாதி கணக்கெடுப்பு கோரிக்கை தொடர்பாக திங்கள்கிழமை பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கப் போகிறது.

கூட்டணியை பாதிக்காது
சாதி கணக்கெடுப்பு இருக்க வேண்டும் என்பது மக்களின் விருப்பம். இது குறித்து நேர்மறையான விவாதம் நடைபெறும் என்று நம்புகிறேன். இந்த விவகாரத்தில் தனது கட்சியும், மத்திய அரசுக்கு தலைமை வகிக்கும் பா.ஜ.க.வும் ஏற்றுக்கொண்ட மாறுபட்ட நிலைப்பாடுகள் கூட்டணியை பாதிக்காது. பீகாரில் உள்ள இரு அவைகளுக்கான சட்டமன்றம் சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ஆதரவாக இரண்டு முறை தீர்மானங்களை நிறைவேற்றியது. இரண்டு சந்தர்ப்பங்களிலும் அனைத்து கட்சிகளும் ஆதரவாக வாக்களித்தன.

விரைவில் விளக்கம்
மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் நாடாளுமன்ற மக்களவையில் சாதி அடிப்படையில் மக்கள்தொகையை கணக்கிட மாட்டோம் என்று கூறினார். ஆனால் பாஜக கூட்டணியில் உள்ள நிதிஷ்குமார் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதால் உறுதியாக உள்ளார். தற்போது அவர் பிரதமரை சந்திக்க உள்ள நிலையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து மத்திய அரசு விரிவான விளக்கம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications