பீகார் சட்டசபைத் தேர்தல்.. வாக்குப்பதிவில் வரலாற்று சாதனை.. ஜனநாயக கடமையை சிறப்பாக செய்த பெண்கள்!
பாட்னா: பீகாரில் சட்டசபைத் தேர்தலில் இரு கட்டங்களாக நடந்த வாக்குப்பதிவில் மொத்தமாக 66.91 சதவிகித வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 1951ஆண்டு முதல் இதுவரை நடந்த எந்த தேர்தல்களிலும் இல்லாத அளவிற்கு வாக்குப்பதிவாகி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இம்முறை அதிகளவில் பெண்கள் வாக்களித்திருப்பதும் தெரிய வந்துள்ளது.
பீகார் சட்டசபைத் தேர்தலை நவம்பர் மாதத்தில் நடக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. இதனையொட்டி பீகாரில் சிறப்பு வாக்காளர் திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் 65 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. சிறப்பு வாக்காளர் சீர்திருத்த பணிகளை பாஜக, ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் வரவேற்றன.

ஆனால் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தினார். இதன்பின் பல்வேறு கட்ட நடவடிக்கைகளுக்கு பின் பீகாரில் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தெதிகளில் இரு கட்டங்களாக சட்டசபைத் தேர்தல் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி நவம்பர் 6ஆம் தேதி 121 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 65.08 சதவிகித வாக்குகள் பதிவாகின.
இதன்பின் இன்று 2ஆம் கட்ட வாக்குப்பதிவு 122 தொகுதிகளில் நடைபெற்றது. இதில் மொத்தமாக 68.76 சதவிகித வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இரு கட்ட தேர்தலிலும் ஆண்களை விடவும் பெண்களே அதிகளவில் வாக்களித்துள்ளனர். முதற்கட்ட வாக்குப்பதிவில் பெண்கள் 69.04 சதவிகிதமும், 2ஆம் கட்ட வாக்குப்பதிவில் பெண்கள் 71.60 சதவிகித, வாக்களித்துள்ளனர்.
அதேபோல் முதற்கட்ட வாக்குப்பதிவில் ஆண்கள் 61.56 சதவிகிதமும், 2ஆம் கட்ட வாக்குப்பதிவில் 64.1 சதவிகிதம் வாக்களித்துள்ளனர். இதன் மூலமாக பெண்கள் 71.60 சதவிகிதமும், ஆண்கள் 62.80 சதவிகிதமும் வாக்களித்த்யுள்ளனர். இறுதியாக பீகார் சட்டசபைத் தேர்தலில் மொத்த 66.91 சதவிகித வாக்குகள் பதிவாகி இருக்கிறது. ஆண்கள் மற்றும் பெண்கள் வாக்குகளுக்கு இடையில் சுமார் 9 சதவிகிதம் வித்தியாசம் ஏற்பட்டுள்ளது.
1951ஆம் ஆண்டு முதல் கடந்த தேர்தல் வரை நடந்த எந்த தேர்தலிலும் இல்லாத அளவிற்கு வாக்குகள் பதிவாகி இருக்கிறது. அதிலும் அதிகளவில் பெண்கள் வாக்களித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. வாக்காளர் சிறப்பு சீர்திருத்தத்தால் வாக்காளர்களின் வாக்குரிமை பாதிக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், வாக்கு சதவிகிதம் அதிகரித்திருப்பது விவாதப் பொருளாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications