BJP Nitin Nabin: பாஜக தலைமையில் மிக பெரிய மாற்றம்.. தேசிய செயல் தலைவராக நிதின் நபின் நியமனம்! யார் இவர்!
டெல்லி: பாஜகவின் தேசிய செயல் தலைவராக நிதின் நபின் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இப்போது தேசிய தலைவராக உள்ள ஜேபி நட்டா பதவிக்காலம் முடிந்த நிலையில், நிதின் நபின் தேசிய செயல் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். யார் இந்த நிதின் நபின்.. இவரது நியமனம் ஏன் முக்கியம் என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
அடுத்தாண்டு தொடக்கத்தில் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உட்பட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பணிகளை அனைத்து அரசியல் கட்சிகளுமே ஆரம்பித்துவிட்டது. பாஜகவும் இதற்கான பணிகளை ஆரம்பித்துள்ளது. தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் மாநிலம் வாரியாக இதற்கான திட்டம் போட்டுள்ளனர்.

முக்கிய மாற்றம்
இதற்கிடையே இப்போது பாஜகவின் தேசியத் தலைமையில் மிக முக்கியமான ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கட்சியின் தேசிய செயல் தலைவராக நிதின் நபின் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இப்போது தேசியத் தலைவராக உள்ள ஜேபி நட்டா பதவிக்காலம் முடிந்தது. நட்டாவுக்கு தொடர்ச்சியாகப் பல முறை 6 மாதக் காலப் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டு வருகிறது.
இந்தச் சூழலில் தான் பீகாரைச் சேர்ந்த மூத்த தலைவரான நிதின் நபின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பீகாரில் நிதிஷ் கேபினட்டில் சாலை போக்குவரத்துத் துறை அமைச்சராக நிதின் இருக்கிறார். இனி நட்டா அறிவுறுத்தல் கீழ் இவரது தலைமையில் பாஜக செயல்படும் எனத் தெரிகிறது.
பிரதமர் மோடி வாழ்த்து
பாஜக தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் இது குறித்த அறிவிப்பை வெளியிட்டார். பாஜக நாடாளுமன்ற வாரிய ஒப்புதலுடன், பீகார் அமைச்சரான நிதின் நபின், பாஜக தேசியச் செயல் தலைவராக நியமிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது நியமனத்திற்குப் பல்வேறு பாஜக தலைவர்களும் வாழ்த்துகளைக் கூறி வருகிறார்கள். குறிப்பாகப் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாகப் பிரதமர் மோடி, "நிதின் நபின் ஓர் இளம் தலைவர். கடினமாக உழைக்கக்கூடியவர்.. கட்சியிலும் இவருக்கு அனுபவமுண்டு. பீகாரில் சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் இவரது பணி மிகவும் திறமையானது. மக்களின் தேவைகளை நிறைவேற்ற முழு அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளார். எளிமையான குணம் கொண்டவராகவும், களத்தில் நின்று உழைப்பவராகவும் அறியப்படுகிறார்" எனப் பாராட்டினார்.
யார் இவர்
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் 1980 மே 23ம் தேதி பிறந்த நிதின் நபீன், மறைந்த பாஜக தலைவர் நவீன் கிஷோர் பிரசாத் சின்ஹாவின் மகன் ஆவார். அரசியல் பாரம்பரியம் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த இவர், தந்தையின் மறைவுக்குப் பின் அரசியலுக்கு வந்தார். அரசியலில் படிப்படியாக மெல்ல உயர்ந்து, முக்கிய பதவிகளைப் பெற்றார். அவர் கடந்த 2006ல் பாட்னாவின் பாங்கிபூர் தொகுதியில் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று பீகார் சட்டசபைக்கு முதல்முறையாகத் தேர்வானார்.
பீகார் அமைச்சர்
அதன் பிறகு 2010, 2015, 2020, மற்றும் 2025 என எல்லாத் தேர்தல்களிலும் வெற்றி பெற்றார். இந்தாண்டு நடந்த பீகார் தேர்தலில் 2025-ல் 52,000 வாக்குகள் வித்தியாசத்தில் மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்தார். இப்போது பீகாரில் அமைச்சராக இருக்கும் அவர், பாஜக இளைஞர் அணியின் தேசிய பொதுச் செயலாளர், பீகார் பாஜக மாநிலத் தலைவர் போன்ற பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார். மேலும், சிக்கிமின் தேர்தல் மற்றும் அமைப்புப் பொறுப்பாளராகவும், சத்தீஸ்கரிலும் அரசியல் பணிகளில் ஈடுபட்டு இருக்கிறார்.
பீகார் தேர்தலுக்கு இவர் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தின்படி, நிதின் நபீன் சொத்து மதிப்பு சுமார் ₹1 கோடியாகும். குற்றப் பின்னணியைப் பொறுத்தவரை எந்தவொரு குற்ற வழக்கிலும் இவர் தன்னைப் பெறவில்லை. தன் மீது எந்தவொரு வழக்கும் இல்லை என்றே அவர் பரிமாணப் பத்திரத்தில் தெரிவித்து இருக்கிறார்.












Click it and Unblock the Notifications