இனி எல்லாத்துக்கும் இந்த ஒன்னு போதுமே.. நாடாளுமன்றத்தில் அறிமுகமான புதிய சட்டம்.. என்னன்னு பாருங்க!
டெல்லி: நீங்கள் பிறந்த தேதி மற்றும் பிறந்த இடத்தை நிரூபிக்க இனி பிறப்புச் சான்றிதழ் ஒரு ஆவணம் போதும். மத்திய அரசின் புதிய சட்டப்படி, இனி பள்ளி மற்றும் கல்லூரிகளில் சேருவது முதல் ஓட்டுநர் உரிமம் வாங்குவது மற்றும் அரசு வேலையில் சேருவது உள்பட எல்லாவற்றிற்கும் பிறப்பு சான்றிதழை ஆவணமாக பயன்படுத்தலாம்.
1969 இல் இயற்றப்பட்ட பிறப்பு மற்றும் இறப்பு பதிவுச் சட்டம், சரியாக 54 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக திருத்தம் செய்யப்பட உள்ளது அனைத்து விதமான அரசு சார்ந்த விஷயங்களுக்கு பிறப்பு சான்றிதழை ஆவணமாக பயன்படுத்த அனுமதிக்கும் புதிய மசோதாவை லோக்சபாவில் மத்திய அரசு புதன்கிழமை அறிமுகம் செய்தது.

உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் லோக்சபாவில் இந்த மசோதாவை அறிமுகம் செய்துள்ளார். இந்த மசோதாவின் படி, பள்ளிகளில் சேருவது தொடங்கி, கல்லூரிகளில் சேருவது, லைசென்ஸ் வாங்குவது, அரசு வேலைகளில் சேருவது போன்றவற்றிருக்கு பிறந்த ஊரின் ஆவணமாக பிறப்பு சான்றிதழை நீங்கள் பயன்படுத்தலாம்.
இந்த புதிய மசோதாவின் படி, மாநில அரசாங்கங்கள் மற்றும் மத்திய அரசின் துறைகள், பிறப்பு இறப்பு பதிவுகளை பயன்படுத்த முடியும். வாக்காளர் பட்டியல் தயாரிக்க, ஆதார் எண் வழங்குவதற்கு, திருமணத்தை பதிவு செய்தவற்கு பயன்படுத்த முடியும்.
இந்த மசோதா குறித்து பேசிய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய், சமூகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் மாறி வரும் தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு ஏற்ப, பொதுமக்களுக்கு இந்த திருத்தங்கள் தேவையாகும். இதற்காக பொதுமக்கள் மற்றும் மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது என்றார்.
நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள பிறப்பு இறப்பு மசோதா சட்டமாக நிறைவேற்றப்பட்ட பின்னர். இந்த சட்டம் நடைமுறைக்கு வரும் தேதியில் இருந்து அல்லது அதற்குப் பிறகு பிறந்த ஒரு நபரின் பிறந்த தேதி மற்றும் பிறந்த இடத்தை நிரூபிக்க ஒரே ஆவணமாக பிறப்புச் சான்றிதழைப் பயன்படுத்தலாம்.
பிறப்பு மற்றும் இறப்பு டேட்டாக்களை மாநில அரசுகள் மற்றும் மத்திய அரசின் பல்வேறு துறைகளை அரசின் சேவை திட்டங்களுக்கு பயன்படுத்த முடியும். அதாவது மக்கள் தொகைப் பதிவு, வாக்காளர் பட்டியல், ஆதார் எண், ரேஷன் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், சொத்துப் பதிவு உள்ளிட்டவற்றிற்கு அரசுகள் பயன்படுத்த முடியும்.
மேலும் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள், அனாதை குழந்தைகள், கைவிடப்பட்ட குழந்தைகள், காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்ட குழந்தைகள், வாடகைத்தாய் குழந்தைகள், சிங்கிள் மதர் குழந்தைகள் அல்லது திருமணமாகாத தாய்க்கு பிறந்த குழந்தைகளின் பிறப்பு ஆவணங்களை பதிவு செய்யும் செயல்முறைகள் இந்த சட்ட திருத்ததால் எளிதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும் அனைத்து மருத்துவமனைகளும் இறப்புக்கான காரணம் குறித்த சான்றிதழை பதிவாளரிடம் வழங்குவதை கட்டாயமாக்குவதற்கும் இந்த மசோதா வழிவகை செய்கிறது. மேலும் உறவினர்களுக்கு இறப்புக்கான காரணங்கள் குறித்த நகலையும் வழங்க வேண்டும். கொரோனா மாதிரியான பெரிய பேரிடர்களில் இறந்தால் அவர்களின் இறப்புகளை விரைவாக பதிவு செய்ய சிறப்பு சப்-ரிஜிஸ்ட்ரார்களை நியமிக்க சட்டதிருத்தம் அனுமதிக்கிறது.
பதிவாளர் அல்லது மாவட்டப் பதிவாளர்களிடம் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் தொடர்பாக பாதிக்கப்பட்ட பொது மக்கள் குறைகளை தெரிவித்து நிவாரணம் பெற முடியும். சில விஷயங்களுக்கு அபராதமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இப்படி பிறப்பு மற்றும் இறப்பு பதிவு திருத்த மசோதாவில் பல்வேறு விஷயங்கள் இடம் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications