எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு.. நிலைக்குழுவிற்கு அனுப்பப்பட்ட.. பெண் திருமண வயதை உயர்த்தும் மசோதா
டெல்லி: பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 18இல் இருந்து 21ஆக உயர்த்தும் மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இந்த மசோதா நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டது.
இந்தியாவில் தற்போது ஆண்களின் திருமண வயது 21ஆகவும் பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது 18ஆக உள்ளது. ஆண்களைப் போலவே பெண்களுக்கும் குறைந்தபட்ச திருமண வயதை 21ஆக உயர்த்த வேண்டும் என ஒரு தரப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 18இல் இருந்து 21ஆக உயர்த்தும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.

குழந்தை திருமணத் தடுப்பு மசோதா 2021
இதையடுத்து பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த வழிவகை செய்யும் குழந்தை திருமணத் தடுப்பு சட்ட (திருத்த) மசோதா 2021-ஐ மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி மக்களவையில் தாக்கல் செய்தார். இருப்பினும், இதற்கு எதிர்க்கட்சிகள் மிகக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். மத்திய அரசு அவசர அவசரமாக இந்த மசோதாவை கொண்டு வரக் காரணம் என்ன எனக் கேள்வி எழுப்பிய காங்கிரஸ் மக்களவை தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி இந்த மசோதாவை நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என வலியுறுத்தினார்.

ஓவைசி எதிர்ப்பு
ஹைதராபாத் எம்பியும் மஜ்லிஸ் கட்சித் தலைவருமான ஓவைசி, "இந்திய அரசின் சட்டப்பிரிவு 19 வழங்கும் சுதந்திரத்திற்கான உரிமைக்கு எதிராக இந்த மசோதா உள்ளது. 18 வயதை நிரம்பியவர்கள் பிரதமரைத் தேர்ந்தெடுக்கலாம். ஆனால் திருமணம் செய்து கொள்ளக் கூடாதா? 18 வயதான இளைஞர்களுக்கு உதவ மத்திய அரசு என்ன திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது? பெண் தொழிலாளர் பங்களிப்பு என்பது சோமாலியாவை விட இந்தியாவில் குறைவாகவே உள்ளது" என்று கடுமையாகப் பேசினார்.

கனிமொழி
இதையடுத்து பேசிய திமுக எம்பி கனிமொழி, "மத்திய அரசு மசோதாக்களைக் கொண்டு வரும்போது யாருடனும் கலந்து ஆலோசிப்பது இல்லை. இத்தகைய முக்கியமான மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அல்லது தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும். இது தொடர்பாக சிவில் சமூகத்தின் கருத்துகளைக் கேட்டறிந்த பின்னரே இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டு வர வேண்டும் " என்றார்.

நாடாளுமன்ற நிலைக்குழு
அனைத்து எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்பிகளும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தால், இந்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்புமாறு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி சபாநாயகரைக் கேட்டுக்கொண்டார். இதையடுத்து குழந்தை திருமணத் தடுப்பு சட்ட (திருத்த) மசோதா 2021 நாடாளுமன்ற நிலைக் குழுவிற்கு அனுப்பப்பட்டது.












Click it and Unblock the Notifications