சிங்கப்பூரில் ஒரு ரகசிய கூட்டம்! கனடா அதிகாரிகளிடம் அஜித் தோவல் சென்னது என்ன? அமெரிக்க நாளிதழ் தகவல்
டெல்லி: கனடாவில் நடந்த காலிஸ்தான் பிரிவினைவாதி கொலைகளுக்கு இந்தியாதான் காரணம் என்று கனடா குற்றம்சாட்டியுள்ளது. கனடா அதிகாரிகளுடன் சிங்கப்பூரில் நடந்த ரகசிய கூட்டத்தில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இது தொடர்பாக, சில விஷயங்களை விவாதித்துள்ளார் என்று அமெரிக்க முன்னணி நாளிதழ் வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.
1970களில் மும்பை, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் மாஃபியா கும்பல்கள் வேகமாக வளர்ந்தன. இந்த கும்பல்கள் ஆள் கடத்தல், கொள்ளை உள்ளிட்ட குற்றங்களைதான் செய்து வந்திருந்தன. ஆனால், இந்த கும்பல் ஒரு கட்டத்தில் அரசியல் கொலையை நோக்கி நகர்ந்தன. இப்படி உருவான மாஃபியா கும்பல் ஒன்றுக்கு பிஷ்னோய் தலைமை ஏற்று இருக்கிறார். பஞ்சாப் பாடகர் சித்து மோசாவாலா கொலை தொடங்கி, மகாராஷ்டிராவின் முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கொலை வரை பிஷ்னோயின் ஆட்கள் செய்ததுதான்.

இவர் தற்போது குஜராத்தின் சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். சிறையில் இருந்தாலும் ஆதரவாளர்கள் பெரும் அளவில் வெளியிலிருந்து இயங்கி வருகிறார்கள். கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதி நிஜ்ஜார் கொலையிலும், பிஷ்னோய் ஆட்கள் முக்கிய ரோல் செய்திருக்கின்றனர். இந்த விவரத்தை சிங்கப்பூரில் நடந்த ரகசிய கூட்டத்தில் இந்தியா-கனடா அதிகாரிகள் விவாதித்திருக்கிறார்கள், என்று அந்த நாளிதழ் தெரிவிக்கிறது.
கடந்த சனிக்கிழமை நடந்த இந்த கூட்டத்தில் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், கனடாவின் பாதுகாப்பு ஆலோசகர் நாதலி டிரூயினின், கனடா துணை வெளிவிவகார அமைச்சர் டேவிட் மோரிசனின் மற்றும் ராயல் கனடியன் மவுண்டெட் போலீசின் ஒரு மூத்த உறுப்பினர் உள்ளிட்டோர் ரகசிய ஆலோசனையை மேற்கொண்டிருந்தனர்.
இந்த கூட்டத்தில் பிஷ்னோய் ஆட்கள், நிஜ்ஜார் கொலையில் சம்பந்தப்பட்டிருப்பதாக விவாதிக்கப்பட்டிருக்கிறது. அவரால் அதை செய்ய முடியும் அந்த அளவுக்கு நெட்வொர்க் உள்ளவர்தான் என்று அஜித் தோவல் ஒப்புக்கொண்டதாக வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம், இதில் இந்தியாவின் பங்கு இல்லை என்றுதான் தோவல் அந்த மீட்டிங்கில் கூறியிருந்தாராம்.
ஏற்கெனவே, இந்திய தூதர அதிகாரிகள் மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் இந்த கொலையில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்று கனடா விமர்சித்திருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக கடந்த ஆண்டு, இந்திய தூதர அதிகாரி ஒருவரை கனடா வெளியேற்றியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவும், கனடா தூதரக அதிகாரிகள் சிலரை வெளியேற்றியிருந்தது.
பின்னர் இந்த பிரச்னை ஓரளவுக்கு ஓய்ந்து, இரு நாட்டின் உறவிலும் இயல்பு நிலை திரும்பியிருந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்து கிளம்பியுள்ளது. இந்திய தூதரக அதிகாரிகள் மீது மீண்டும் கனடா குற்றம்சாட்டியதை அடுத்து பிரச்னை வெடித்திருக்கிறது.
குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், கனடாவுக்கான இந்திய தூதரக அதிகாரியை வெளியுறவுத்துறை அமைச்சகம் திரும்ப பெற்றிருக்கிறது. பதிலுக்கு கனடாவும் அதே மாதிரி நடவடிக்கையை எடுத்தது.
"அரசியல் ஆதாயங்களுக்காக இந்தியாவை வேண்டுமென்றே கொச்சைப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது கனடா. இந்தியா பலமுறை கேட்டும் இந்த வழக்கு குறித்த எந்தவொரு சிறிய ஆதாரத்தையும் கனடா பகிர்ந்து கொள்ளவில்லை. இந்த சமீபத்திய குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது இந்தியா மீதான கனடா பிரதமர் ட்ரூடோவின் விரோதம் வெளிப்படையாக தெரிந்த ஒன்றுதான். குறுகிய அரசியல் ஆதாயங்களுக்காக ட்ரூடோ தலைமையிலான கனடா அரசு இந்திய-விரோத பிரிவினைவாதத்திற்கு உதவுகிறது" என்று வெளியுறவுத்துறை குற்றம்சாட்டியுள்ளது.
இப்படி இருக்கையில் நிஜ்ஜார் கொலையில், பிஷ்னோய் ஆட்கள் ஈடுபட்டிருப்பதாக அமெரிக்க நாளிதழ் மூலம் தகவல்கள் வெளியாகியிருப்பது புதிய விவாதங்களை கிளப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications