முஸ்லிம்கள் அதிகம் வாழும் தொகுதியில் வென்ற பாஜக வேட்பாளர்.. யார் இந்த மோகன் சிங்? டெல்லியில் ட்விஸ்ட்
டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் முஸ்தபாபாத் தொகுதியில் பாஜக வேட்பாளர் மோகன் சிங் பிஷ்ட் வெற்றி பெற்றுள்ளார். இவர் யார்? எப்படி இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் தொகுதியில் வென்றார்? என்பது பற்றிய சுவாரசிய தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லியில் மொத்தம் 70 சட்டசபை தொகுதிகள் உள்ளன. கடந்த 5ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆம்ஆத்மி கட்சி பாஜகவிடம் தோல்வியடைந்து ஆட்சியை பறிகொடுத்துள்ளது.

ஓட்டு எண்ணிக்கை முடிவில் 70 தொகுதிகளில் பாஜக 48 இடங்களில் பாஜகவும், 22 தொகுதிகளில் ஆம்ஆத்மி கட்சியும் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. டெல்லியில் தனித்து ஆட்சியை பிடிக்க தேவையான பெரும்பான்மைக்கு 36 தொகுதிகளில் வென்றால் போதும். தற்போது பாஜக 48 தொகுதிகளில் வெற்றி பெற்று தனித்து ஆட்சியை கைப்பற்றி உள்ளது.
இதன்மூலம் 27 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் பாஜக ஆட்சி அமைவது உறுதியாகி உள்ளது. இந்த வெற்றியை பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர். இதற்கிடையே தான் இன்னொரு முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது டெல்லியில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் தொகுதியில் பாஜக வேட்பாளர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார். அந்த தொகுதியின் பெயர் முஸ்தபாபாத்.
முஸ்தபாபாத் சட்டசபை தொகுதியில் மொத்தமுள்ள மக்கள்தொகையில் 39.5 சதவீதம் பேர் இஸ்லாமியர்கள் தான். கடந்த 2020ம் ஆண்டு நடந்த டெல்லி கலவரத்தில் இந்த பகதி தான் அதிகம் பாதிக்கப்பட்டது. மொத்தம் 53 பேர் இறந்தனர். இப்படியான சூழலில் தான் முஸ்தபாபாத் சட்டசபை தொகுதியில் அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி முன்னாள் ஆம்ஆத்மி கவுன்சிலரும், 2020 டெல்லி கலவரத்தில் குற்றம்சாட்டப்பட்டவருமான தாஹீர் உசேனை களமிறக்கியது. ஆம்ஆத்மி கட்சி அடில் அகமது கான், காங்கிரஸ் சார்பில் அலி மெஹந்தி ஆகியோர் வேட்பாளராக போட்டியிட்டனர். பாஜக சார்பில் மோகன் சிங் பிஷ்ட் வேட்பாளராக போட்டியிட்டார். தற்போது பாஜக வேட்பாளர் மோகன் சிங் பிஷ்ட் அமோக வெற்றி பெற்றுள்ளார்.
இந்த தொகுதியில் மோகன் சிங் பிஷ்ட் மொத்தம் 85,215 ஓட்டுகள் பெற்று 17,578 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் ஆம்ஆத்மி வேட்பாளர் அடில் அகமது கான் 67,637 ஓட்டுகள் பெற்று 2வது இடம் பிடித்தார். ஓவைசியின் கட்சி வேட்பாளர் தாஹிர் உசேன் 33,474 ஓட்டுகளுடன் 3வது இடமும், காங்கிரஸ் கட்சியின் அலி மெஹந்தி 11763 ஓட்டுகளுடன் 4வது இடமும் பெற்றார்.
முஸ்தபாபாத் சட்டசபை தொகுதியில் வெற்றி பெற்றுள்ள பாஜக வேட்பாளர் மோகன் சிங் பிஷ்ட் டெல்லி அரசியலில் நீண்ட அனுபவம் கொண்டவர். முதல் முதலாக கடந்த 1998 ம் ஆண்டில் காரவால் நகர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார். 2015ம் ஆண்டு வரை அந்த தொகுதியின் எம்எல்ஏவாக இருந்தார். அதாவது 1998, 2003, 2008, 2013 ஆகிய ஆண்டுகளில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2015ல் நடந்த சட்டசபை தேர்தலில் மோகன் சிங் பிஷ்ட் காரவால் நகர் தொகுதியில் தோல்வியடைந்தார். ஆம்ஆத்மி வேட்பாளர் கபில் மிஸ்ரா அவரை வீழ்த்தினார்.
கடந்த 2020ல் காரவால் நகர் தொகுதியில் மீண்டும் களமிறங்கிய மோகன் சிங் பிஷ்ட் ஆம்ஆத்மி கட்சியின் துர்கேஷ் பதாக்கை வீழ்த்தி வெற்றி பெற்றார்.இந்த முறை பாஜக மோகன் சிங் பிஷ்ட்டுக்கு காரவால் நகர் தொகுதியில் சீட் வழங்கவில்லை. அதற்கு பதிலாக அவருக்கு முஸ்தபாபாத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கியது. இந்த தொகுதியில் பாஜக சார்பில் கபில் மிஸ்ரா இஸ்லாமியர்கள் அதிகம் இருக்கும் தொகுதி என்பதால் அவர் தோற்கலாம் என்று கூறப்பட்ட நிலையில் வெற்றி பெற்றுள்ளார்.
இந்த தொகுதியில் ஆம்ஆத்மி, ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி மற்றும் ஆத்ஆத்மி ஆகிய 3 கட்சிகளும் இஸ்லாமியர்களை வேட்பாளர்களாக நிறுத்தியது. ஆனால் மோகன் சிங் பிஷ்ட் இந்து வேட்பாளராக பாஜகவில் போட்டியிட்டார். இதனால் இஸ்லாமியர்களி்ன ஓட்டுகள் 3 கட்சிக்கும் பிரிந்த நிலையில் மற்ற மதத்தினரின் ஓட்டுகள் அப்படியே மோகன் சிங் பிஷ்ட்டுக்கு கிடைத்துள்ளது. இதனால் தான் அவர் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் முஸ்தபாபாத் தொகுதியில் அமோக வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications