பலாத்கார குற்றவாளியான எம்.எல்.ஏ. குல்தீப்சிங்கை கட்டம் கட்டி தூக்கியது பாஜக!
டெல்லி; உத்தரப்பிரதேசம் உன்னாவ் பலாத்கார சம்பவத்தில் குற்றவாளியான எம்.எல்.ஏ. குல்தீப்சிங் சென்கரை கட்சியில் இருந்து டிஸ்மிஸ் செய்வதாக பாஜக அறிவித்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் இளம்பெண் ஒருவரை எம்.எல்.ஏ. குல்தீப்சிங் பலாத்காரம் செய்தார் என்பது புகார். இந்த புகார் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதேநேரத்தில் புகார் தெரிவித்த பெண்ணின் தந்தை உள்ளிட்டோரை கைது செய்து சிறையில் அடைத்தது போலீஸ். சிறையில் பெண்ணின் தந்தை மர்மமான முறையில் உயிரிழந்தார்.
இதையடுத்து எம்.எல்.ஏ. குல்தீப்சிங் கைது செய்யப்பட்டார். ஆனாலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வந்தன. அத்துடன் பெண்ணின் உறவினர்கள் மர்மமான முறையில் மரணமடைந்தனர்.
இதனிடையே சில நாட்களுக்கு முன் புகார் தெரிவித்த பெண், அவரத தாயார், வழக்கறிஞர் மற்றும் உறவினர்கள் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்து தொடர்பான விசாரணையில் திட்டமிட்ட படுகொலை முயற்சி என்பது அம்பலமானது.
இச்சம்பவத்தில் புகார் தெரிவித்த பெண்ணின் உறவினர்கள் 2 பேர் பலியாகினர். நாடு முழுவதும் இச்சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதனையடுத்து எம்.எல்.ஏ.குல்தீப்சிங்கை பாஜகவில் இருந்து சஸ்பென்ட் செய்வதாக அறிவித்தது பாஜக. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் எம்.எல்.ஏ. குல்தீப்சிங்கை கட்சியைவிட்டே நீக்குவதாக அறிவித்துள்ளது பாஜக.