தேர்தல் நன்கொடை.. ரூ 3,355 கோடியுடன் பாஜக தான் டாப்.. காங்கிரஸ், திமுகவுக்கு எவ்வளவு தெரியுமா
டெல்லி: கடந்த 2019-20 நிதியாண்டில் ஒட்டுமொத்தமாகத் தேர்தல் பாண்டுகள் மூலம் அளிக்கப்பட்ட நன்கொடையில் சுமார் 76%, அதாவது 3,355 கோடி ரூபாய் பாஜகவுக்கு மட்டுமே சென்றுள்ளது.
இந்தியாவில் தனி நபர்கள் தொடங்கி கார்பரேட் நிறுவனங்கள் வரை அனைத்து தரப்பும் அரசியல் கட்சிகளுக்குத் தேர்தல் நிதி கொடுக்கும். தேர்தல் காலங்களில் இதுபோல நன்கொடை அளிப்பது பல மடங்கு அதிகரிக்கும்.
இந்நிலையில், 2019-20 நிதியாண்டில் அரசியல் கட்சிகள் தேர்தல் பாண்டுகள் மூலம் பெற்ற தேர்தல் நன்கொடை குறித்த தகவல்களை என்டிடிவி செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

பாஜகவுக்கு அதிகம்
மக்களவை தேர்தல் நடைபெற்ற கடந்த 2019-20ஆம் ஆண்டில் தேர்தல் பாண்டுகள் மூலம் மொத்தம் 3,355 கோடி ரூபாய் நன்கொடை அளிக்கப்பட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக 2,555 கோடி ரூபாயை பாஜக மட்டுமே நன்கொடையாகப் பெற்றுள்ளது. அதாவது ஒட்டுமொத்தமாகத் தேர்தல் பாண்டுகள் மூலம் அளிக்கப்பட்ட நன்கொடைகளில் 76% பாஜகவிற்கே சென்றுள்ளது. மேலும், இது அதற்கு முந்தைய ஆண்டு தேர்தல் பாண்டுகள் மூலம் பாஜக பெற்ற 1450 கோடி ரூபாயைவிட 75% அதிகமாகும்.

காங்கிரஸுக்கு சரிவு
அதேநேரம், மற்றொரு முக்கிய தேசிய கட்சியான காங்கிரஸுக்கு தேர்தல் பாண்டுகள் மூலம் கிடைக்கும் நன்கொடை 17% வரை குறைந்துள்ளது. கடந்த 2018-19இல் 383 கோடி ரூபாயைத் தேர்தல் பாண்டுகள் மூலம் காங்கிரஸ் பெற்றிருந்த நிலையில், 2019-20ஆம் நிதியாண்டில் இது 318 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது. 2019-20 நிதியாண்டில் தேர்தல் பாண்டுகள் மூலம் அளிக்கப்பட்ட நன்கொடையில் இது 9% ஆகும்.

திமுகவுக்கு எவ்வளவு
இதைத் தொடர்ந்து, மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ரூ 100.46 கோடி, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி ரூ 29.25 கோடி, சிவசேனா ரூ 41 கோடி, லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் ரூ 2.5 கோடி, அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி ரூ 18 கோடியைத் தேர்தல் பாண்டுகள் மூலம் நன்கொடையாகப் பெற்றுள்ளன. அதேபோல திமுக ரூ 45 கோடியைத் தேர்தல் பாண்டுகள் மூலம் நன்கொடையாகப் பெற்றுள்ளது.

தேர்தல் பாண்டுகள்
இந்தியாவில் விரும்பும் அரசியல் கட்சிக்கு ஒருவர் பல்வேறு முறைகளில் நன்கொடை அளிக்கலாம். அதில் தேர்தல் பாண்டுகள் மூலம் ஒருவர் அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிக்கும் போது யார் நிதி அளிக்கிறார்கள் என்பதை வெளியிட வேண்டியது கட்டாயம், ஆனால் யாருக்கு அளிக்கிறார்கள், அதாவது எந்த அரசியல் கட்சி அந்த நிதியைப் பெறுகிறது என்பதை வெயிட தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2017-18ஆம் ஆண்டில் இந்த தேர்தல் பாண்டுகள் முறை அமலுக்கு வந்ததில் இருந்து பாஜகவே அதிகளவில் நன்கொடை பெற்றுள்ளது. அதேபோல பாஜக தவிர மற்ற கட்சிகளின் நன்கொடையும் பல மடங்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications