பீகாரில் பீதியில் பாஜக..அரசியலில் களமிறங்கும் நிதிஷ்குமார் மகன்.. கூட்டணியில் இருந்து ஜேடியூ விலகல்?
டெல்லி: பீகார் மாநில சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் முதல்வர் நிதிஷ்குமாரின் மகன் நிஷாந்த் குமார், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் (ஜேடியூ) தலைவராகக் கூடும் என வெளியாகி இருக்கும் செய்திகள் பாஜகவை கதிகலங்க வைத்துள்ளது. அதேநேரத்தில் நிஷாந்த் குமார், ஜேடியூ தலைவரானால்தான் பாஜகவிடம் இருந்து அந்த கட்சியை காப்பாற்ற முடியும் என எதிர்க்கட்சித் தலைவரான ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் வரவேற்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பீகார் மாநில சட்டசபை தேர்தல் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவு தரும் முக்கிய கட்சிகளில் ஜேடியூவும் ஒன்று. இதனால் பீகாரில் ஜேடியூ தலைவரும் முதல்வருமான நிதிஷ்குமாரை முன்னிறுத்தியே தேர்தலை சந்திப்போம் என பாஜக தலைவர்கள் திட்டவட்டமாக கூறி வருகின்றனர்.

அதேநேரத்தில் நிதிஷ்குமாரைப் பொறுத்தவரையில் நிலையான நிலைப்பாடுகளை எடுக்காதவர் என்பதால் பாஜகவும் அச்சத்தில்தான் இருந்து வருகிறது. இந்த நிலையில் நிதிஷ்குமாரின் மகன் நிஷாந்த் குமார், ஜேடியூ தலைவராகக் கூடும்; பீகார் சட்டசபை தேர்தல் களத்தில் நிஷாந்த் குமார் களமிறங்குவார் என செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
இது தொடர்பாக லாலுவின் ஆர்ஜேடி தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ், நிஷாந்த் குமார் அரசியல் வருகையை வரவேற்றுள்ளார். இது தொடர்பாக தேஜஸ்வி யாதவ் கூறுகையில், சரத் யாதவ் உருவாக்கிய ஐக்கிய ஜனதா தளம் கட்சியை பாஜக கபளீகரம் செய்துவிட்டது. ஜேடியூவின் தலைவரான நிதிஷ்குமாரின் உடல்நிலை குறித்து பாஜக கூட்டணி கட்சிகளே கேள்வி எழுப்புகின்றன. பாஜகவின் பிடியில் இருந்து ஜேடியூவை மீட்க வேண்டும் எனில் நிஷாந்த் குமார் வருகைதான் சரியானதாக இருக்கும் என கொளுத்திப் போட்டுள்ளார்.
இது தொடர்பாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகையில், பீகாரில் நிஷாந்த் குமார் வருகை புதிய அரசியல் அத்தியாயமாக இருக்கக் கூடும்; லாலுவின் மகன் தேஜஸ்வியும் நிதிஷ்குமார் மகன் நிஷாந்தும் கூட்டணி அமைத்தால் பாஜகவுக்கு மிகப் பெரிய நெருக்கடி உருவாகும். பீகார் அரசியலைப் பொறுத்தவரையில் எதுவும் நடக்கலாம் என்பதால்தான் பாஜக மிகப் பெரும் அச்சத்தில் இருக்கின்றன என்கின்றனர்.












Click it and Unblock the Notifications