‛ஒரே பொய்’.. பாஜக அமைச்சர்களை கடுமையாக விமர்சித்த ராகுல் காந்தி.. பரபரத்த பத்திரிகையாளர் சந்திப்பு
டெல்லி: பாஜக அமைச்சர்கள் தன்னை பற்றி பொய்களை பரப்பி விடுகின்றனர் என எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட ராகுல் காந்தி இன்று டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது ஆக்ரோஷமாக தெரிவித்தார்.
மோடி பெயர் சர்ச்சையில் சிக்கிய ராகுல் காந்திக்கு எதிராக குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் பாஜக முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்எல்ஏவுமான புர்னேஷ் மோடி கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்தார். 4 ஆண்டுகளாக இந்த வழக்கு நிலுவையில் இருந்தது.
இந்நிலையில் தான் சூரத் நீதிமன்றம் நேற்று முன்தினம் ராகுல் காந்தியை குற்றவாளியாக அறிவித்து 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதையடுத்து நேற்று ராகுல் காந்தி எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

எம்பி பதவியை இழந்த ராகுல்
இதன்மூலம் ராகுல் காந்தி எம்பி பதவியை இழந்துள்ளார். இதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதேபோல் திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்பட பல எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். அரசியல் காழ்ப்புணர்ச்சி மற்றும் ராகுல் காந்தியை எதிர்கொள்ள பாஜக பயப்படுவதால் தான் அவரை தகுதி நீக்கம் செய்துள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகளின் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பயமுறுத்த முடியாது
இந்நிலையில் தான் டெல்லியில் இன்று ராகுல் காந்தி பத்திரிகையாளர்களை சந்தித்தார். இந்த வேளையில் ராகுல் காந்தி கூறியதாவது: அதானி ஷெல் நிறுவனங்களில் 20,000 கோடி ரூபாய் முதலீடு செய்தது யார்? இதுபற்றி தொடர்ந்து கேள்விகள் கேட்பேன். அதானி விவகாரத்தில் இருந்து விவாதத்தை திசை திருப்பவே தற்போதைய நாடகம் திட்டமிடப்பட்டுள்ளது. என்னை தகுதி நீக்கம் செய்வதன் மூலமாகவோ அல்லது சிறையில் அடைப்பதன் மூலமாகவோ என்னை ஒருபோதும் பயமுறுத்த முடியாது. நான் எனது கொள்கைளில் இருந்து பின்வாங்கவே மாட்டேன்'' என்றார்.

பொய் பேசும் பாஜக அமைச்சர்கள்
இந்த வேளையில், ‛‛இந்தியாவின் ஜனநாயகத்தை மீட்டெடுக்க வெளிநாடுகளின் தலையீட்டை நீங்கள் விரும்பி அழைத்ததாக பாஜகவினர் குற்றம்சாட்டுகிறார்களே? என கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது கோபமடைந்த ராகுல் காந்தி, ‛‛ பாஜக அமைச்சர்கள் என்னை பற்றி பொய் சொல்கிறார்கள். வெளிநாட்டினரை தலையீடும்படி நான் ஒருபோதும் கேட்கவில்லை'' என்றார்.

ஜனநாயகம் அச்சுறுத்தல்
மேலும் பேசிய ராகுல் காந்தி ‛‛இந்திய ஜனநாயகம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகிறது. இதற்காக உதாரணங்களை நான் பலமுறை வெளியிட்டு இருக்கிறேன். இந்திய மக்களுக்கான ஜனநாயக குரலை பாதுகாக்க நான் இங்கு வந்துள்ளேன். அதைத் தொடர்ந்து செய்வேன். எம்பியாக இருந்தாலு சரி, இல்லாவிட்டாலும் சரி நான் யாருக்கும் பயப்படமாட்டேன். அதானி விவகாரம் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்புவேன்'' என்றார்.












Click it and Unblock the Notifications