அவர் ராஜிவ்காந்தி அல்ல.. ராஜிவ் பெரோஸ் கான்.. லோக்சபாவில் பாஜக எம்பி சர்ச்சை பேச்சு
டெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பெயர் ராஜீவ் பெரோஸ் கான் என்றும், இந்திரா காந்தி முஸ்லீமாக மதம் மாறியவர் என்றும் பாஜக எம்பி பர்வேஸ் வர்மா லோக்சபாவில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு டெல்லி லோக்சபா தொகுதியில் இருந்து பாஜக சார்பில் லோக்சபாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் பர்வேஸ் வர்மா. டெல்லி சட்டசபை தேர்தலில் மதரீதியாக பிரச்சாரங்கள் செய்ததால் இவருக்கு தேர்தல் ஆணையம் 96 மணிநேரம் பிரச்சாரம் செய்ய தடை விதித்துள்ளது.
இந்த நிலையில்தான் லோக்சபாவில் இன்று குடியரசு தலைவர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசினார் பர்வேஸ் வர்மா. அப்போதும் அவர் தனது மதரீதியான பேச்சை விட்டுவிடவில்லை.
இந்திரா காந்தி பெரோஸ் கான் என்ற முஸ்லீமை மணமுடித்தார். அவரும் முஸ்லிமாக மாறினார். பின்னர் ஜவகர்லால் நேரு குடும்பத்து பாரம்பரியத்தை காட்டிக் கொள்வதற்காக காந்தி என்று தனது பெயருக்கு பின்னால் சேர்த்துக் கொண்டார். எனவே ராஜீவ் பெரோஸ்கான் என்ற பெயர்தான் ராஜீவ் காந்தி என்பதற்கு சரியான பெயர்.
சி.ஏ.ஏ. போராட்டங்களுக்கு முன் முதல் முறையாக அஸ்ஸாம் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர் மோடி
குடியுரிமை சட்டத் திருத்தமை மத்திய அரசு வாபஸ் பெறும் பேச்சுக்கே இடமில்லை. ஏனெனில் இது ராஜீவ் பெரோஸ்கான் அரசு கிடையாது. நரேந்திர மோடி அரசு. குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக போராடுபவர்கள் மோடியையும் அமித்ஷாவையும் எப்படி கொலை செய்வது என்பது பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் உண்மையில் போராடவில்லை. இவ்வாறு அவர் உரை நிகழ்த்தினார்.
முன்னதாக இவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சி உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்து விட்டனர். தனது உரையின்போது ஜெய் ஸ்ரீராம் என்று சொல்லி ஆரம்பித்தார் பர்வேஸ் வர்மா என்பது குறிப்பிடதக்கது.