வெளிநாட்டவருக்கு பிறந்தததால் நீங்க தேசபக்தர் இல்லை... ராகுல் மீது பாஜக எம்பி பிரக்யாசிங் அட்டாக்
டெல்லி: வெளிநாட்டவருக்கு பிறந்ததால் ராகுல் காந்தி தேசபக்தர் இல்லை என்று பாரதிய ஜனதா கட்சி எம்.பி. பிரக்யாசிங் தாக்கூர் கடுமையாக தாக்கியுள்ளார்.
சீனா விவகாரத்தில் பிரதமர் மோடியை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து வருகிறார். அண்மையில் இது தொடர்பாக வீடியோ பதிவு ஒன்றையும் ராகுல் வெளியிட்டிருந்தார்.
அதில், எல்லையில் சீனா ஊடுருவி இந்திய நிலத்தை ஆக்கிரமித்தது உண்மைதான். அதை மீட்க கடும் நடவடிக்கை எடுப்போம் என உண்மையை பிரதமர் மோடி பேசி இருக்க வேண்டும். அப்படி பேசி இருந்தால் ஒட்டுமொத்த தேசமும் உங்கள் பின்னால் நிற்கும் என கூறியிருந்தார்.
சாத்தான்குளம் சம்பவம்.. தூத்துக்குடி ஏஎஸ்பி, டிஎஸ்பி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.. என்ன நடந்தது?
பாஜக- காங்கிரஸ் விமர்சனம்
இதற்கு பதிலடியாக பாஜக தரப்பில் காங்கிரஸ் மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. காங்கிரஸ் கட்சிக்கும் சீனாவுக்குமான உறவுகள், நிதி பரிமாற்றங்கள் குறித்தும் கேள்வி எழுப்பப்படுகின்றன. இந்நிலையில் பாஜகவின் சர்ச்சைக்குரிய எம்பி சாத்வி பிரக்யாசிங் தாக்கூர் ராகுல் காந்தியை மிக கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
யார் தேசபக்தர்?
இது குறித்து பிரக்யாசிங் தாக்கூர் கூறியதாவது: இந்த மண்ணின் மைந்தனால்தான் தேசபக்தியுடன் இருக்க முடியும்; வெளிநாட்டு பெண்மணிக்கு பிறந்த ஒருவரால் தேசபக்தராக இருக்க முடியாது என்று சாணக்கியர் கூறுகிறார். நீங்கள் இருநாடுகளின் குடியுரிமையை வைத்திருக்கிறீர்கள்.. உங்களால் எப்படி தேசபக்தியை வெளிப்படுத்த முடியும்?
காங்கிரஸ் பதிலடி
காங்கிரஸ் கட்சிக்கு எப்படி பேசுவது என்பது கூட தெரியவில்லை. எந்த ஒரு அறமுமே இல்லாமல் காங்கிரஸ் விமர்சனங்களை முன்வைக்கிறது. இவ்வாறு பிரக்யாசிங் தாக்கூர் கூறினார். ராகுல் காந்தியை இலக்கு வைத்து பிரக்யாசிங் பேசியிருப்பதற்கு காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்துள்ளது.
பயங்கரவாத வழக்கு
மத்திய பிரதேச காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜேபி தனோபியா கூறியிருப்பதாவது: எம்.பி. பதவிக்கே லாயக்கே இல்லாதவர் பிரக்யாசிங் தாக்கூர். பயங்கரவாத வழக்குகளில் தொடர்புடையவர் பிரக்யாசிங். தற்போது மனநிலை பிறழ்ந்தவராக விமர்சிக்கிறார். அவருக்கு நல்ல சிகிச்சையை பாஜகதான் அளிக்க வேண்டும். இவ்வாறு ஜேபி தனோபியா தெரிவித்துள்ளார்.