ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது.. சட்டசபைத் தேர்தலில்..ரசிகர்களுக்கு பாஜக வைக்கும் கடைசிக் குறி?
டெல்லி: நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருதை மத்திய பாஜக அரசு திடீரென அறிவித்திருப்பது தமிழக சட்டசபை தேர்தலில் ரஜினி ரசிகர்களின் வாக்குகளை குறிவைத்துதான் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
ரஜினிகாந்துக்கு ஆகப் பெரும் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது; ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் தலைகீழாக மாற்றம் வந்துவிடும் என்பதுதான் பாஜகவின் கணக்காக இருந்தது. ரஜினிகாந்துக்கு ரசிகர்கள் பட்டாளம் இருப்பது வேறு; தமிழகத்தில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது வேறு என்பதை பாஜக புரியவில்லை.
அதைவிட ரஜினிகாந்த் என்ற சூப்பர் ஸ்டாருக்கு தமிழ்நாட்டின் அரசியல் குறித்த அடிப்படை புரிதல் கிஞ்சித்தும் எதுவும் இல்லை. அதனால்தான் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியதாக சொன்னார்; யார் அந்த 7 தமிழர்கள் என்று எகத்தாளமாக கேள்வி கேட்கிற போக்கு ரஜினிகாந்திடம் இருந்தது.
அரசியலில் எஸ்கேப்
எந்த ஒரு விஷயத்திலும் எந்த ஒரு தெளிவும் இல்லாத குழம்பிய மனிதர் ரஜினிகாந்த் என்பதுதான் அவரது ஒவ்வொரு பேட்டிக்கும் ஒரு விளக்கம் என்பதாகவும் இருந்தது. இப்படியான ரஜினிகாந்தை தூண்டிவிட்டு அரசியல் கட்சி தொடங்க வைக்க படாதபாடு பட்டது பாரதிய ஜனதா கட்சி. ஆனால் ரஜினிகாந்த், பாஜகவின் பிடிக்குள் சிக்காமல் கொரோனாவை காரணம் காட்டி அரசியலுக்கே குட்பை சொல்லி தப்பிவிட்டார்.
ரஜினி நோ வாய்ஸ்
இருந்தாலும் விடாது கருப்பாய் ரஜினிகாந்தை பாஜக துரத்திக் கொண்டிருக்கிறது. தேர்தல் நேரத்தில் ரஜினிகாந்த் தங்களுக்கு வாய்ஸ் கொடுப்பார் என இலவு காத்த கிளியாக காத்து இருந்தது. ம்ஹூம் எதுவும் பேசப் போவதில்லை; யாருக்கும் ஆதரவு தரப்போவதில்லை என கடும் மவுனமாகிப் போய்கிடக்கிறார் ரஜினிகாந்த்.
தாதா சாகேப் பால்கே விருது
இதனால்தான் இப்போது தாதா சாகேப் பால்கே விருதை அறிவித்து ரஜினிகாந்தின் மவுனத்தின் மீது கல்லெறிகிறதாம் பாஜக. அதாவது ரஜினிகாந்துக்கு இப்படி விருது கொடுத்தால் உடனே அவரது ரசிகர்கள் மாய்ந்து மாய்ந்து தேடி தேடி பாரதிய ஜனதா கட்சிக்கு ஓட்டுப் போடுவார்கள் என இன்னமும் மனப்பால் குடித்துக் கொண்டிருக்கிறது பாஜக.
பாஜகவின் பரிதாபம்
இதில் வேடிக்கை என்னவென்றால் தாம் அரசியலுக்கே வந்தாலும் கூட தம்மால் ஜெயிக்க முடியாது; தமது சினிமா ஆதரவு வேறு; அரசியல் களம் வேறு என்பதை ஓரளவு யூகித்தவராக ரஜினிகாந்த் இருந்தார். ஆனால் பாரதிய ஜனதா கட்சியோ இந்த அடிப்படையை இவ்வளவு பட்டும் இன்னமும் புரியாத மக்கு கட்சியாகவே இருப்பதுதான் பரிதாபம்.
பாஜக என்ன செய்ய வேண்டும்?
ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருதுக்கும் மேலாக ஏதேனும் ஒரு விருது கொடுத்தாலும் கூட அம்மஞ்சலி ஓட்டு கூட தமிழகத்தில் பாஜகவால் தேற்றிவிட முடியாது. இன்னமும் சொல்லப் போனால் இப்படியான குறுக்கு வழிகள், வன்முறை ஆட்டங்கள் போன்றவற்றை கைவிட்டு விட்டு தமிழகத்தின் உணர்வுகள், அடிப்படை தேவைகள், மக்கள் பிரச்சனைகளில் மட்டும் பாஜக அக்கறை செலுத்துவதுதான் ஒன்றிரண்டு சீட்டுகளுக்காவது உதவி செய்யக் கூடியதாக இருக்கும் என்பதை எப்போதுதான் புரிந்து கொள்வார்களோ?