ஆம் ஆத்மிக்கு எதிராக.. பாஜக போட்டி போராட்டம்! கெஜ்ரிவால் பதவி விலக வலியுறுத்தல்! டெல்லியில் சலசலப்பு
டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் இன்று பிரதமர் மோடியின் வீட்டை முற்றுகையிடும் போராட்டத்தை முன்னெடுத்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலக வேண்டும் என்று பாஜக போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தொடர்ந்து சம்மன் அனுப்பி வந்தது. ஆனால் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. இறுதியாக 8வது முறை சம்மன் அனுப்பப்பட்டபோது, டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் அமலாக்கத்துறை தன்னை கைது செய்யக்கூடாது என்று கேட்டிருந்தார். ஆனால் மனுவை நீதிமன்றம் நிராகரித்தது.

இதனையடுத்து, அன்றிரவே அதிரடி ரெய்டு நடத்தி கெஜ்ரிவாலை அமலாகத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இது நாடு முழுவதும் பெரும் விவாதங்களை கிளப்பியது. ஏற்கெனவே பல்வேறு குற்றச்சாட்டுகளில் டெல்லி அமைச்சர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கின்றனர். தேசிய அளவில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனும் சமீபத்தில்தான் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து தற்போது கெஜ்ரிவாலும் கைது செய்யப்பட்டிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியது.
மத்திய அரசு, எதிர்க்கட்சி தலைவர்களை பழிவாங்க விசாரணை அமைப்புகளை ஏவி விடுவதாக குற்றம்சாட்டிய ஆம் ஆத்மி, கெஜ்ரிவால் கைதை கண்டித்து பிரதமர் வீட்டை முற்றுகையிடும் போராட்டத்தை இன்று நடத்தினர். இதனால் மொத்த டெல்லியும் உஷார்படுத்தப்பட்டது. ஏராளமான அளவில் போலீசாரும், துணை ராணுவப்படையினரும் குவிக்கப்பட்டனர். லோக் கல்யாண் மார்க் மெட்ரோ ரயில் நிலையம் மூடப்பட்டது.
இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் ஆம் ஆத்மிக்கு எதிராக பாஜகவினர் போராட்டத்தில் இறங்கினர். அதாவது, முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கெஜ்ரிவால் பதவி விலக வேண்டும் என்று கூறி தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு பாஜகவினர் போராட்டம் நடத்தினர். ஃபெரோஸ்ஷா கோட்லா மைதானம் அருகே கூடி, டெல்லி செயலகம் நோக்கி பேரணியாகச் சென்ற போராட்டக்காரர்கள் கெஜ்ரிவாலுக்கு எதிராகவும், ஆம் ஆத்மிக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர்.
போராட்டம் குறித்து பேசிய பாஜக மூத்த தலைவரும், எம்.பி.யுமான ஹர்ஷ் வர்தன், "கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். எனவே அவர் தார்மீக அடிப்படையில் ராஜினாமா செய்துவிட்டு வேறு ஒருவரிடம் தனது பொறுப்பை ஒப்படைக்க வேண்டும். அமலாக்கத்துறை காவலில் இருக்கும்போது, அமைச்சர்களுக்கு வழிக்காட்டுதல்களை வழங்குவது என்பது சரியானது அல்ல. இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்குமாறு டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவிடம் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications