அதானி மீதான அமெரிக்கா குற்றப்பத்திரிகையில் தமிழ்நாடு, சத்தீஸ்கர்.. ராகுலுக்கு தெரியுமா? பாஜக கேள்வி
டெல்லி: தொழிலதிபர் கவுதம் அதானிக்கு எதிராக அமெரிக்கா நீதிமன்றம் பிறப்பித்த பிடிவாரண்ட் வழக்கில் எதிர்க்கட்சிகள் ஆளும் தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் சத்தீஸ்கர் மாநில அரசுகள் மீதும் குற்றம்சாட்டப்பட்டிருப்பது லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்திக்கு தெரியுமா? என பாஜக கேள்வி எழுப்பி உள்ளது. தமிழ்நாடு, ஆந்திரா, சத்தீஸ்கர் மாநில மின்சார வாரிய அதிகாரிகளுக்குதான் அதானி குழுமம் லஞ்சம் கொடுத்ததாக அமெரிக்காவின் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி பாஜக இந்த கேள்வியை எழுப்பி உள்ளது.
அதானி குழுமம், சூரிய ஒளி மின்சார உற்பத்தித் திட்டங்களுக்காக மத்திய அரசின் SECI - Solar Energy Corporation of India உடன் ஒப்பந்தம் செய்திருக்கிறது. இந்த SECI நிறுவனத்துடன் பல்வேறு மாநிலங்களின் மின்சார வாரியங்கள் ஒப்பந்தங்கல் செய்ய வலியுறுத்தி லஞ்சம் கொடுத்தது அதானி குழுமம் என்பது அமெரிக்காவின் புகார். மாநில அரசுகள் SECI உடன் செய்திருக்கும் ஒப்பந்தங்களை வைத்து அமெரிக்க நிறுவனங்களிடம் ரூ20,000 கோடி முதலீடு பெற்றார் அதானி; ஆனால் அதானி தாம் லஞ்சம் கொடுத்து மாநிலங்கள் மூலமாக ஒப்பந்தங்களைப் பெற்றதை மறைத்து இந்த முதலீடுகளைப் பெற்றார் என்பது அமெரிக்காவின் வழக்கு.

அமெரிக்காவின் நியூயார்க் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட இந்த வழக்கில் அதானி உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது பெரும் புயலைக் கிளப்பி உள்ளது. இதனால் பங்குச் சந்தைகளில் அதானி குழுமத்தின் பங்கு மதிப்புகள் மிக மோசமான சரிவை இன்று எதிர்கொண்டன. ஆனால் அதானி குழுமம் இந்த குற்றச்சாட்டுகளைத் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அதானியை உடனே கைது செய்ய வேண்டும். பிரதமர் மோடியை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் அதானி. இதனால்தான் முறைகேடுகள் செய்தாலும் சுதந்திரமாகவே அதானி வலம் வருகிறார் என குற்றம்சாட்டி இருந்தார்.
இதற்கு பாஜக தரப்பில் இருந்து பதிலடி தரப்பட்டுள்ளது. பாஜகவின் செய்தித் தொடர்பாளர் சம்பித் பட்ரா இது தொடர்பாக கூறுகையில், அதானி லஞ்சம் கொடுத்ததாக கூறப்படும் மாநிலங்கள், எதிர்க்கட்சிகள் ஆளுகிற தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்கள்தான். இதனை ராகுல் காந்தி புரிந்து கொண்டாரா? பிரதமர் மோடியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவே ராகுல் காந்தி முயற்சிக்கிறார். அதானி விவகாரத்தில் குற்றம்சாட்ட 4 மாநிலங்களிலுமே அப்போது அதாவது 2021-22-ல் பாஜக ஆட்சி செய்யவில்லை. இத்தனைக்கும் சத்தீஸ்கரிலும் தமிழ்நாட்டிலும் காங்கிரஸ் கூட்டணி கட்சிதான் ஆட்சியில் இருந்தது என்றார்.












Click it and Unblock the Notifications