நுபுர் ஷர்மா குறித்து உச்சநீதிமன்றத்தின் கருத்து.. பாஜகவை வெட்கி தலைகுனிய வைத்துள்ளது.. காங்கிரஸ்!
டெல்லி: நுபுர் ஷர்மாவின் பேச்சு குறித்து உச்சநீதிமன்றத்தின் கருத்து, அதிகாரத்தில் இருக்கும் பாஜகவை வெட்கித் தலைகுனிய வைத்துள்ளது என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.
Recommended Video
இஸ்லாமிய இறைத் தூதா் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக முன்னாள் செய்தித் தொடா்பாளா் நூபுா் சா்மா, தனக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் இருக்கும் வழக்குகளை தில்லிக்கு மாற்றக் கோரி தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், நுபுர் சர்மவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
அதில், நுபுர் சர்மா தனது பொறுப்பற்ற பேச்சால் நாட்டையே தீக்கிரையாக்கிவிட்டார். அவருக்கு எதிராக பதிவான புகார்களின் மீது டெல்லி போலீஸ் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது. உதய்பூரில் டெய்லர் கொல்லப்பட்டது நுபுர் சர்மாவின் பேச்சால்தான். தொலைக்காட்சியில் தோன்றி மக்களிடம் நுபுர் சர்மா மன்னிப்பு கேட்க வேண்டும். ஒரு கட்சியின் செய்தி தொடர்பாளராக இருப்பதால் எதை வேண்டுமானாலும் பேசி விடமுடியாது. நாட்டில் தற்போது நடப்பதற்கு இவரே பொறுப்பு.
நுபுர் சர்மா மீது இத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவரை ஏன் டெல்லி காவல்துறை கைது செய்யவில்லை? அதிகாரம் தங்களிடம் இருக்கிறது என்பதற்காக எப்படி வேண்டுமானாலும் பேசலாம் என்பது எப்படி சரியாகும்? இதுஜனநாயக நாடுதான். தாம் பேசியதால் ஏற்படும் எதிர்விளைவுகளை பற்றி கொஞ்சமும் யோசிக்காமல் பேசியிருக்கிறார் என்று கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ், நுபுர் ஷர்மா வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் கருத்துக்கள் முக்கியமானவை மற்றும் தொலைநோக்குப் பார்வை கொண்டவை. இந்த கருத்துக்கள், ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் பாஜகவை வெட்கித் தலைகுனிய வைத்துள்ளது.
உச்ச நீதிமன்றம் இந்த அரசாங்கத்திற்கு ஒரு கண்ணாடியைப் பிடித்து, அதன் செயல்களின் அடித்தள அசிங்கத்தைக் காண்பித்துள்ளது. இதன் மூலம் பாஜக சாதி மற்றும் மதவாத உணர்வுகளைத் தூண்டி ஆதாயம் தேட முயல்கிறது என்பதை அனைவருக்கும் வெளிச்சம் போட்டி காட்டப்பட்டுள்ளது. அழிவை ஏற்படுத்தும் வகையில் இருக்கும், பிளவுபடுத்தும் சித்தாந்தங்களை எதிர்த்துப் போராடும் நம் ஒவ்வொருவருக்குமான உறுதியை உச்சநீதிமன்றத்தின் வார்த்தைகள் பலப்படுத்தியுள்ளது.
அரசியல் ஆதாயங்களுக்காகத் தேசத்தைக் குழப்பத்தில் ஆழ்த்தும் அனைத்து வகையான தேச விரோத சக்திகளுக்கும் எதிரான போராட்டத்தை இந்தியத் தேசிய காங்கிரஸ் ஒருபோதும் நிறுத்தாது என்று தெரிவித்துள்ளார்.