துக்ளக், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுடன் மோடியை ஒப்பிட்டு பாஜக சுப்பிரமணியன் சுவாமி மீண்டும் தாக்கு!
டெல்லி: முகம்மது பின் துக்ளக் மற்றும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடியை ஒப்பிட்டு பாஜகவை சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி மீண்டும் கடுமையாக விமர்சித்துள்ளார். பாஜகவில் இருந்தாலும் மோடி- அமித்ஷாவை கடுமையாக தாக்கி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார் சுப்பிரமணியன் சுவாமி.
ஜனதா கட்சியை நடத்தி வந்த சுப்பிரமணியன் சுவாமி பாஜகவில் அக்கட்சியை இணைத்தார். பாஜகவில் இணைந்தது முதலே அக்கட்சியிலும் பாஜக ஆட்சியிலும் முக்கிய பதவிகளை ஆவலுடன் எதிர்பார்த்தும் காத்திருந்தார் சுப்பிரமணியன் சுவாமி. ஆனால் பாஜக மேலிடமோ சுப்பிரமணியன் சுவாமியை பொருட்டாகவே மதிக்க கூடாது என்பதை கொள்கையாகவே வைத்திருக்கிறது போல.

மறைந்த நிதி அமைச்சர் அருண்ஜேட்லி தொடங்கி சுப்பிரமணியன் சுவாமியால் சீண்டப்படாத பாஜக தலைவர்களே இல்லை என்பதுதான் நிதர்சனம். அதேபோல மத்திய நிதி அமைச்சர் பதவி உள்ளிட்டவைகளுக்கும் சுப்பிரமணியன் சுவாமி இலக்கு வைத்துப் பார்த்தார். ஆனாலும் எதுவும் நடக்கவில்லை. அதிகபட்சமாக அவருக்கு ராஜ்யசபா எம்பி பதவி கிடைத்தது.
ஒருகட்டத்தில் பாஜகவில் இருந்து கொண்டே மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியுடன் நட்பு பாராட்டினார். இதனால் பாஜகவை விட்டு திரிணாமுல் காங்கிரஸில் சுப்பிரமணியன் சுவாமி இணைவார் எனவும் கூறப்பட்டது. லோக்சபா தேர்தல் முடிவுகள் வந்த போது கூட சுப்பிரமணியன் சுவாமி இவ்வளவு கடுமையான பதிவுகளை வெளியிட்டது இல்லை.
கடந்த சில நாட்களாக பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா ஆகியோரை கடுமையாக விமர்சித்து வருகிறார் சுப்பிரமணியன் சுவாமி. எமர்ஜென்சி குறித்த பதிவில், அவசர நிலை பிரகடனத்துக்கு எதிராக மோடியும் அமித்ஷாவும் என்னதான் செய்தார்கள்? என கேள்வி எழுப்பி இருந்தார்.
7 மாநிலங்களின் 13 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தல்களில் பாஜக பெரும் தோல்வியை சந்தித்தது குறித்த பதிவில், பாஜகவில் இருக்கும் நாம் நமது கட்சி டைட்டானிக் கப்பல் போல மூழ்குவதைப் பார்க்க வேண்டுமானால் பிரதமர் மோடியின் தலைமைதான் சிறப்புக்குரியதாக இருக்கும். 13 தொகுதி இடைத்தேர்தல் முடிவுகளானவை, பாஜக நிரந்தரமாக மூழ்கப் போவதற்கான முன் விரிசல்களை வெளிப்படுத்தி இருக்கிறது என விமர்சித்திருந்தார்.
இதன் தொடர்ச்சியாக இன்று, முகம்மது பின் துக்ளக்- பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் அவர்களது கட்டிடங்களால்தான் நினைவில் இருக்கின்றனர். அதேபோல மோடியும் அடிக்கல் நாட்டிய கட்டிடங்களின் பெயரால் நினைவில் இருப்பார். அதேபோல லடாக்கில் சீனாவிடம் சரணடைந்ததற்காகவும் மோடி நினைவில் கொள்ளப்படுவார் எனவும் காட்டமாக விமர்சித்துள்ளார் சுப்பிரமணியன் சுவாமி.












Click it and Unblock the Notifications