"தென்னிந்தியா + மேற்கு வங்கம்.. இந்த முறை பாஜக தான்.." விளக்கமாக சொன்ன பிரசாந்த் கிஷோர்! எப்படி
டெல்லி: லோக்சபா தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில், இதில் பாஜக ஒரு வெற்றியைப் பெறும் என்பது தொடர்பாகப் பிரபல தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
நமது நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடக்கிறது. தொடர்ந்து ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது.

பிரசாந்த் கிஷோர்: இதற்கிடையே சமீபத்தில் ஆங்கில செய்தி ஏஜென்சிக்கு பிரசாந்த் கிஷோர், இந்த முறை தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்.. பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு எந்தளவுக்கு இருக்கிறது உள்ளிட்ட பல முக்கிய விஷயங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
குறிப்பாக தெற்கு மற்றும் கிழக்கு இந்திய மாநிலங்களில் பாஜக குறிப்பிடத்தக்க அளவில் முன்னேறும் என்று பிரசாந்த் கிஷோர் கணித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "பாஜக கிழக்கு மற்றும் தென்னிந்தியாவில் இந்த முறை பாஜக தான்.. இந்த பகுதிகளில் இதற்கு முன்பு வெல்லாத அளவில் பல இடங்களில் பாஜக வெல்லும். குறிப்பாகத் தமிழகத்தில் அவர்கள் வாக்கு வங்கி கணிசமாக அதிகரிக்கும்.
தென் மாநிலங்கள்: தமிழகத்தில் முதல்முறையாக அவர்கள் 10 சதவிகிதத்திற்கு மேல் வாக்குகளைப் பெறுவார்கள். தெலுங்கானாவில் மிகப் பெரிய கட்சி அல்லது இரண்டாவது பெரிய கட்சியாக அவர்கள் வருவார்கள். ஒடிசாவில் சந்தேகமே இல்லாமல் பாஜக தான் அதிக சீட்களில் வெல்லும்.. அனைவருக்கும் ஷாக் தரும் வகையில் மேற்கு வங்கத்தில் பாஜக முதலிடத்தைப் பிடிக்கும். நான் சொல்வது உங்களுக்கு ஆச்சரியத்தைத் தரலாம். ஆனால் இதுதான் நடக்கும்.
அதேநேரம் பாஜக இந்தத் தேர்தலில் 543 சீட்களில் 370இல் வெல்ல வேண்டும் என்ற இலக்கை நிர்ணயம் செய்துள்ளனர். ஆனால், அவ்வளவு பெரிய வெற்றியை அவர்களால் பெற முடியாது என்பதே உண்மை" என்றார். கடந்த 2019 தேர்தலில் தமிழகம் ஆந்திரா, கேரளா, ஒடிசா. மேற்கு வங்கம், பீகார் மாநிலங்களைச் சேர்த்து பாஜகவால் 50 சீட்களில் கூட வெல்ல முடியவில்லை. இந்தச் சூழலில் தான் பிரசாந்த் கிஷோர் இங்கே பாஜக மிகப் பெரிய வெற்றியைப் பெறும் எனக் கூறியிருக்கிறார்.
போட்டி எங்கே: தொடர்ந்து பேசிய அவர், "இந்தி ஹார்ட் லேண்ட் மாநிலங்களிலும் மேற்கு இந்தியாவிலும் பாஜக மிக வலுவாக இருக்கிறது. இந்த பிராந்தியத்தில் எதிர்க்கட்சிகள் குறிப்பாகக் காங்கிரஸ், குறைந்தது 100 இடங்களையாவது பாஜக இழப்பதை உறுதி செய்ய வேண்டும். அப்போது தான் போட்டி இருக்கும். ஆனால், இந்த முறை எதிர்க்கட்சிகளால் அதைச் செய்ய முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை.
எதிர்க்கட்சிகள் செய்யும் தவறு: கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டிற்கு எத்தனை முறை சென்றுள்ளார் எனப் பாருங்கள். மறுபுறம் கடுமையான போட்டி இருக்கும் மாநிலங்களுக்கு ராகுல் காந்தி அல்லது சோனியா காந்தி அல்லது வேறு எந்த எதிர்க்கட்சித் தலைவராவது சென்றுள்ளாரா எனப் பாருங்கள்.. உத்தரப் பிரதேசம், பீகார் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களில் போட்டிப் போட வேண்டிச் சூழல் இருக்கும் போது நீங்கள் மணிப்பூர் மற்றும் மேகாலயாவுக்குச் செல்கிறீர்கள் என்றால் உங்களுக்கு எப்படி வெற்றி கிடைக்கும்.
காங்கிரஸ், சமாஜ்வாதி, ஆர்ஜேடி, தேசியவாத காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் போன்ற கட்சிகளால் தங்கள் சொந்த களத்தில் கூட பாஜகவை நேருக்கு நேர் வீழ்த்த முடியவில்லை. பாஜகவுக்கு எதிராக வலுவான ஒரு பிரச்சாரத்தை முன்னெடுக்க அவர்களால் முடியவில்லை. இதன் காரணமாகவே பாஜக மிக எளிதாக வெல்கிறது" என்றார்.












Click it and Unblock the Notifications