19 எம்.பி. பதவிகளுக்கான ராஜ்யசபா தேர்தல்: பாஜகவுக்கு 8; காங்கிரஸுக்கு 4 -ல் வெற்றி
டெல்லி: 19 ராஜ்யசபா எம்.பி. பதவிகளுக்கான தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 8, காங்கிரஸ் கட்சி 5 இடங்களைக் கைப்பற்றியுள்ளன.
ராஜ்யசபாவின் 24 எம்.பி.க்களின் பதவி காலம் முடிவடைவதால் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் ஏற்பாடுகள் செய்திருந்தது. ஆனால் கொரோனா லாக்டவுனால் இந்த தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

இதனையடுத்து 24 எம்.பி. இடங்களுக்கு ஜூன் 19-ல் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த தேர்தலில் கர்நாடகாவில் முன்னாள் பிரதமர் தேவகவுடா, மூத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பாஜக எம்பிக்கள் இரன்ன கடாடி, அசோக் காஸ்தி, அருணாசலப் பிரதேசத்தின் நாமப் ரெபியா ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதனால் 19 எம்.பி. இடங்களுக்கு வெள்ளிக்கிழமையன்று தேர்தல் பரபரப்பாக நடைபெற்றது. குஜராத், ராஜஸ்தான் மற்றும் மணிப்பூரில் எம்.எல்.ஏக்களை வளைப்பதில் கட்சிகள் படுதீவிரம் காட்டியதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது இந்த தேர்தல்.
வெள்ளிக்கிழமை மாலை 5 மணியுடன் வாக்குப் பதிவு முடிவடைந்தது. பின்னர் உடனடியாக வாக்குகளை எண்ணும் பணி தொடங்கி முடிவுகள் அறிவிக்கப்பட்டது. 19 இடங்களுக்கான தேர்தலில் பாஜக 8; காங்கிரஸ் 5 எம்.பிக்களைப் பெற்றுள்ளனர் (ஜே.எம்.எம். காங்கிரஸ் கூட்டணி). ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு 4 எம்.பி.க்கள் கிடைத்துள்ளனர். மாநில கட்சிகளான என்.பி.பி, எம்.என்.எப். ஆகியவை தலா 1 எம்.பி இடங்களைப் பெற்றுள்ளன.
பாஜகவின் ஜோதிராதித்ய சிந்தியா, காங்கிரஸின் திக்விஜய்சிங், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் சிபுசோரன், காங்கிரஸின் கேசி வேணுகோபால் ஆகியோர் வெற்றி பெற்றவர்களில் முக்கியமானவர்கள். மணிப்பூரில் பெரும் பரபரப்புக்கு இடையே பாஜக வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications