டெல்லி: இஸ்ரேல் தூதரகம் குண்டுவெடிப்பு - மும்பை இஸ்ரேல் துணைத்தூதரக அலுவலகத்தில் பலத்த பாதுகாப்பு
டெல்லியில் இன்று இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளதை அடுத்து அரசு அலுவலக கட்டிடங்கள், விமான நிலையங்களுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மும்பையில் உள்ள இஸ்ரேல் துணைத் தூதரக அலுவலகத்திலு
டெல்லி: இஸ்ரேல் தூதரகம் அருகே இன்று நிகழ்ந்த குண்டு வெடிப்பில் நான்கு கார்கள் சேதமடைந்துள்ளன ஒருவர் காயமடைந்துள்ளார். தலைநகர் டெல்லியில் அரசு அலுவலக கட்டிடங்கள், விமான நிலையங்களுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மும்பையில் உள்ள இஸ்ரேல் துணைத் தூதரக அலுவலகத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
டெல்லி இந்தியா கேட் அருகே அமைந்துள்ள டாக்டர் அப்துல்கலாம் சாலையில் இஸ்ரேல் தூதரகம் அமைந்துள்ளது. இந்த இஸ்ரேல் தூதரகம் அருகே 50 மீட்டருக்குள் இன்று மாலையில் வெடிகுண்டு வெடித்துள்ளது. இந்த சம்பவத்தில் அந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த 4 கார்கள் சேதமடைந்தன. ஒருவர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியானது.
தகவலறிந்த டெல்லி காவல்துறை, அப்பகுதியில் உள்ள சாலைகளை முடக்கினர். தொடர்ந்து, குண்டுவெடித்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். குண்டுவெடித்த இடத்திற்கு அருகே தீயணைப்பு வாகனமும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், குண்டுவெடித்த இடத்திற்கு அருகே வேறு ஏதும் குண்டு பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து குண்டுசெயலிழப்பு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த செயலில் ஈடுபட்டது யார்? என்பது குறித்து டெல்லி போலீஸ் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். சம்பவம் குறித்து பேசிய
தீயணைப்பு அதிகாரி பிரேம் லால், குண்டுவெடிப்பு தொடர்பாக மாலை 5.45 மணியளவில் எங்களுக்கு அழைப்பு வந்தது, நாங்கள் அந்த இடத்தை அடைந்தோம். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என கூறினார். குண்டு வெடிப்பு தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தேசிய தலைநகரில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டுவெடிப்பு குறித்து கவலை தெரிவித்துள்ளார், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று கூறியுள்ள முதல்வர் கெஜ்ரிவால், டெல்லியின் அமைதியை சீர்குலைக்கும் எந்தவொரு முயற்சியையும் இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து அரசு அலுவலக கட்டிடங்கள், விமான நிலையங்களுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மூத்த காவல்துறை அதிகரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
இஸ்ரேல் நாட்டு தூதரக அதிகாரிகளிடம் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் தொலைபேசியில் ஆலோசனை நடத்தியுள்ளார். மும்பையில் உள்ள இஸ்ரேல் துணைத் தூதரக அலுவலகத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் ஒருபுறம் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் தொடங்கியுள்ள நிலையில், டெல்லியில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.