கர்நாடகாவில் மீண்டும் பரபரப்பு.. எம்எல்ஏக்கள் பதவிகேட்டு பிரச்சனை.. டெல்லியில் எடியூரப்பா
டெல்லி: அமைச்சர் பதவி கேட்டு பலரும் முரண்டு பிடித்து போர்க்கொடி உயர்த்துவதால் அதிருப்தியாளர்களை சமாளிக்க முடியாமல் அதிர்ச்சி அடைந்த கர்நாடகா முதல்வர் எடியூரப்பா இன்று டெல்லியில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
அமைச்சர் பதவி கேட்டு ஆளாளுக்கு போர்க்கொடி உயர்த்தியதால்தான் கர்நாடகத்தில் காங்கிரஸ் மதசார்பற்ற ஜனதாதளம் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. இதன் காரணமாக அங்கு பாஜக ஆட்சி அமைந்தது. பிஎஸ் எடியூரப்பா பாஜக சார்பில் முதல்வராக பதவியேற்றார்.ஆனால் அவர் பதவியேற்று பல நாள்களுக்கு பின்னரே அதாவது கடந்த 20ம் தேதி அமைச்சரவையை விரிவாக்கம் செய்தார். முதற்கட்டமாக 17 பேர் மட்டும் புதிய அமைச்சர்களாக பதவி ஏற்றனர்.
இந்நிலையில் அமைச்சர் பதவியை எதிர்பார்த்து காத்திருந்த பா.ஜனதா மூத்த தலைவரான உமேஷ் கட்டி, திப்பாரெட்டி, ரேணுகாச்சார்யா, பாலசந்திர ஜார்கிகோளி உள்பட பலருக்கு அமைச்சர் பதவி கிடைக்காத காரணத்தால் ஏமாற்றம் அடைந்தனர்.
இதனால் அவர்களின் ஆதரவாளர்கள் அமைச்சர்கள் பதவி ஏற்பு விழா அன்று பெரிய அளவில் பெங்களூருவில் போராட்டம் நடத்தினர். இதனால் மீண்டும் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் முதல்வர் எடியூரப்பா ஆரம்பமே இப்படி ஆகிவிட்டதை நினைத்து அதிர்ச்சி அடைந்துள்ளார். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பாஜக தலைமையிடம் ஆலோசிக்க நேற்று இரவு 7.40 மணிக்கு விமானம் மூலம் பெங்களூருவில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார்.
எடியூரப்பா இன்று பாஜக தேசிய தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித்ஷாவை சந்தித்து இந்த பிரச்சனை தொடர்பாக பேச உள்ளார். அப்போது புதிய அமைச்ர்களுக்கு இலாகா ஒதுக்கீடு பற்றி ஆலோசனை நடத்த உள்ளதோடு, யார் யாருக்கு விரிவாக்கம் செய்யப்பட உள்ள அமைச்சரவையில் பதவி வழங்கலாம் என்பதையும் அமித்ஷா உடன் ஆலோசிக்க உள்ளாராம்.
இதற்கிடையே, டெல்லியில் தங்கி உள்ள கர்நாடகாவைச் சேர்ந்த தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களையும் எடியூரப்பா சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சந்திப்பின்போது தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் 3பேர் தங்களுக்கு கட்டாயம் அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என எடியூரப்பாவிடம் கோரிக்கை வைக்க உள்ளார்களாம். இதனால் அவர்களுக்கும் அமைச்சர் பதவி வழங்க வேண்டிய நெருக்கடியில் எடியூரப்பா உள்ளார்.