Budget 2020: நாளை பட்ஜெட் தாக்கல்.. வருமான வரி சலுகைக்கு வாய்ப்பு.. சலுகை மழைக்கு ரெடியாகும் நிர்மலா
Recommended Video
டெல்லி: தனிநபர் வருமான வரி சலுகை, கிராமப்புற மற்றும் வேளாண் துறைகளுக்கான திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்பு செலவினங்களை ஊக்குவிக்கும் வகையிலான ஒரு "ஃபீல்-குட்" பட்ஜெட்டை, நாளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார் நிர்மலா சீதாராமன். 10 வருடங்களுக்கும் மேலாக மிக மோசமான பொருளாதார மந்தநிலையை எதிர்கொண்டு வருவதால், நுகர்வோர் தேவை மற்றும் முதலீட்டைத் தூண்டுவதற்கான அனைத்து முட்டுக் கட்டைகளையும் நிர்மலா சீதாராமன் உடைத்தெறிவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த மோடி ஆட்சியின்போது பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமன், இந்த ஆட்சி காலத்தில் நிதியமைச்சராக்கப்பட்டுள்ளார். நாளை சமர்ப்பிக்கப்பட உள்ளது நிர்மலா சீதாராமனின் இரண்டாவது பட்ஜெட் ஆகும்.
இந்த பட்ஜெட், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளை அறிவிக்கும் என்றும், 2025 ஆம் ஆண்டில் 5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை எட்ட வேண்டும் என்ற இலக்கை அடைவதற்கான தெளிவான வரைபடத்தை உருவாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கார்ப்பரேட் வரி குறைப்புக்கள் மற்றும் பிற நடவடிக்கைகள், அதிக அந்நிய நேரடி முதலீடு, அரசுக்கு சொந்தமான வங்கிகளை ஒருங்கிணைப்பதற்கான திட்டங்கள் மற்றும் வரி தளர்த்தல் போன்றவற்றை அரசு முன்னெடுத்தபோதிலும், முதலீடுகள் அதிகரிக்கத் தவறிவிட்டன.
கடந்த ஆண்டு செப்டம்பரில் கார்ப்பரேட் வரி குறைக்கப்பட்டது. ஆனால், போதிய முதலீடு வரவில்லை. எனவே தனிநபர் வருமான வரிகளை குறைப்பது அரசின் அடுத்த அஸ்திரமாக இருக்க கூடும் என்ற ஊகங்கள் பரவலாக உள்ளன. அடிப்படை விலக்கு வரம்பை அதிகரிப்பது அல்லது அதிக வருமானங்களுக்கான வேறுபட்ட வரி விகித கட்டமைப்பை அறிமுகப்படுத்துதல் ஆகியவை திட்டமாக இருக்கலாம்.
சர்ச்சை பேச்சு... எதையும் கரெக்டா பேசுங்க... அமைச்சரிடம் கடுகடுத்த முதல்வர்
"கடந்த நான்கு மாதங்களில் அரசு பல தூண்டுதல் நடவடிக்கைகளை அறிவித்தது. ஆனால் நுகர்வோரிடம் நம்பிக்கை இல்லை. மோசமான பயம் மட்டுமே இருக்கிறது. வீடுகளையோ அல்லது கார்களையோ வாங்க கடன் பெறுவதில் பலர் ஆர்வம் காட்டவில்லை. பொருளாதாரத்தில் நல்ல காரணிகளை காண முடியவில்லை" என்று ஒரு மூத்த அரசு அதிகாரி தெரிவித்ததாக பி.டி.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே இந்த பட்ஜெட் ஒரு ஃபீல் குட் பட்ஜெட்டாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன், இது பொருளாதாரத்தில் நம்பிக்கையை மீட்டெடுக்க முயற்சிக்கும் மற்றும் செலவு மற்றும் முதலீடுகளை ஊக்குவிக்கும் என்று அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.