பக்த கோடிகளே.. ரெடியா.. அயோத்தி, காசி தரிசனம் கூட்டிப்போறாங்களாம்.. ஆன்மீக சுற்றுலா அறிவித்த நிர்மலா
டெல்லி: ஆன்மீக சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விதமாக ஆன்மீக சுற்றுலா திட்டம் மேம்படுத்தப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
இந்தியாவில் பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. அதிலும் காசி தொடங்கி ராமேஸ்வரம் வரை பலரும் ஆன்மீக சுற்றுலா சென்று வருகின்றனர். பத்ரிநாத், கேதார்நாத் போன்ற தலங்களுக்கு சார்தாம் யாத்திரை சென்று வருகின்றனர்.

பனிலிங்கத்தை தரிசனம் செய்ய லட்சக்கணக்கான மக்கள் அமர்நாத் புனித யாத்திரை சென்று வருகின்றனர். இந்த நிலையில் இடைக்கால பட்ஜெட்டில் ஆன்மிக சுற்றுலாவுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என இந்திய வணிகம் மற்றும் தொழில்துறையின் MSME தேசிய கவுன்சிலின் தலைவர் மங்குரிஷ் பை ரைக்கர் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய அசோசெம் தலைவர், வாரணாசி மற்றும் அயோத்தியில் நாம் பார்த்தது போல் பலரைக் கவர்ந்த ஆன்மிகச் சுற்றுலாவுக்கும் அரசு திட்டமிட்டுள்ளது. மற்ற இடங்களும் கவனத்தில் கொள்ளப்படும். இடைக்கால பட்ஜெட்டில் இது பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று நான் நம்புகிறேன் என்று கூறினார்.
இந்த நிலையில் இன்றைய தினம் 2024 - 2025ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். அடுத்த சில மாதங்களில் லோக்சபா தேர்தல் வரவுள்ள நிலையில், இந்த பட்ஜெட் அறிவிப்புகள் நிறைந்த கடந்த பத்தாண்டு கால சாதனைகளை அறிவிக்கும் பட்ஜெட் ஆக இருந்தது.
பட்ஜெட் உரையை வாசித்த நிர்மலா சீதாராமன், அயோத்தி போன்ற வளர்ந்து வரும் இடங்கள் ராமர் கோயில் திறப்பு விழாவிற்குப் பிறகு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. ஆன்மீக சுற்றுலாவின் வளர்ச்சி கண்டுள்ளது.
ஆன்மிக சுற்றுலாவின் மூலம் உள்ளூர் தொழில் முனைவோருக்கு மிகப்பெரிய வாய்ப்புகளை அதிகரித்துள்ளது. இதே போல கலாச்சார சின்னங்கள், சுற்றுலா மையங்களின் வளர்ச்சியை அதிகரிக்க மாநிலங்கள் ஊக்குவிக்கப்படும்.
இந்தியாவின் பொருளாதார பலம், வர்த்தகம் மற்றும் பிசினஸ் மற்றும் ஆன்மீக சுற்றுலாவிற்கும் உகந்த இடமாக மாற்றியுள்ளது என்று நிதியமைச்சர் கூறினார். லட்சத்தீவுகள் மிகச்சிறந்த சுற்றுலா மையமாக உருவாக்கப்படும். ஆன்மீக சுற்றுலா மேம்படுத்தப்படும்.
வட கிழக்கு மாநிலங்களுக்கு கூடுதலாக முக்கியத்துவம் வழங்கப்படும். இது இடைக்கால பட்ஜெட் என்பதால் இதில் அனைத்தையும் அறிவிக்க முடியாது. அடுத்த அரசு ஆட்சிக்கு வரும் வரை நாட்டை நடத்த இடைக்கால பட்ஜெட் உதவும் என்றும் நிதியமைச்சர் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் இருந்து ஆண்டு தோறும் காசி தமிழ் சங்கமம் என்ற பெயரில் ஆன்மீக சுற்றுலாவிற்கு அழைத்துச்செல்லப்படுகின்றனர். தற்போது அயோத்தி ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளதால் தினசரியும் லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்திக்கு வருகை தருகின்றனர். இதனையடுத்து நாடுமுழுவதும் உள்ள ஆன்மீக தலங்களுக்கு பக்தர்களை அழைத்துச் செல்லும் வகையில் ஆன்மீக சுற்றுலா மேம்படுத்தப்படும் என்று கூறியுள்ளார்












Click it and Unblock the Notifications