பட்ஜெட் 2025.. பீகார் பாரம்பரிய சேலை அணிந்த நிர்மலா சீதாராமன்.. உடுத்தியதன் காரணம் என்ன?
டெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை 8வது முறையாக தாக்கல் செய்யவுள்ளார். இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக பீகாரின் பாரம்பரிய கலை வடிவமான மதுபானி கலை நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள வெள்ளை நிறத்தினாலான பட்டுச் சேலையை அணிந்து வந்துள்ளார். இதன் விளக்கம் மற்றும் காரணங்கள் குறித்து பார்க்கலாம்.
2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்னும் சற்று நேரத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 8வது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். ஏற்கனவே பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.

ஒவ்வொரு முறையும் பட்ஜெட் எவ்வளவு கவனிக்கப்படுகிறதோ, அதே அளவிற்கு நிர்மலா சீதாராமன் உடுத்தும் ஆடையும் கவனிக்கப்படும். 2019ஆம் ஆண்டு இளஞ்சிவப்பு மற்றும் மங்களகிரி சேலையில் வந்து பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 2020ஆம் ஆண்டு மஞ்சள் மற்றும் தங்க பட்டினாலான சேலை அணிந்திருந்தார். தங்க நிறம் எப்போதும் செழிப்பை அடையாளப்படுத்தும்.
அதேபோல் 2021ஆம் ஆண்டு சிவப்பு மற்றும் வெள்ளை நிறப் பட்டு போச்சம்பள்ளி சேலை அணிந்து வந்தார். 2022ஆம் ஆண்டு ஒடிசாவின் பொம்காய் சேலையை அணிந்து பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 2023ஆம் ஆண்டு சிவப்பு நிற சேலையையும், 2024ஆம் அண்டு நீலம் மற்றும் கிரீம் நிற சேலையை அணிந்து பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.
இந்த நிலையில் நடப்பாண்டுக்கான பட்ஜெட்டை வெள்ளை நிற கைத்தறிப் பட்டுப்புடவை அணிந்து வந்துள்ளார். அதன் பார்டர் தங்க நிறத்தில் அமைந்துள்ளது. அதில் மீனை கருப்பொருளாக கொண்டு எம்பிராய்டரி வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மதுபானி கலைக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த சேலையை நிர்மலா சீதாராமன் உடுத்தி இருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் இந்த பட்டுப்புடவை பத்ம விருது பெற்ற துலாரி தேவியால் உருவாக்கப்பட்டுள்ளது. மதுபானி கலை என்பது பீகாரின் மிதிலா பகுதியில் உள்ள பாரம்பரியமான நாட்டுப்புற கலை வடிவமாகும். வழக்கமாக வெள்ளை நிறம் என்பது வளர்ச்சியை, அமைதியை, மகிழ்ச்சியை அடையாளப்படுத்தும். இதனால் இந்தியாவில் தனி நபர் வருமான வரி உச்ச வரம்பில் மாற்றம் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications