இதற்கு எல்லாம் பதில் இல்லையே? ரபேல் சிஏஜி அறிக்கை தவறவிட்ட விஷயங்கள்!
ரபேல் ஒப்பந்தம் தொடர்பான சிஏஜி அறிக்கையில் சில முக்கியமான கேள்விகளுக்கு பதில் அளிக்கப்படாமல் இருக்கிறது.
டெல்லி: ரபேல் ஒப்பந்தம் தொடர்பான சிஏஜி அறிக்கையில் சில முக்கியமான கேள்விகளுக்கு பதில் அளிக்கப்படாமல் இருக்கிறது.
ரபேல் விவகாரம் மிக உச்ச கட்ட நிலையை அடைந்து உள்ளது. ரபேல் ஒப்பந்தம் தொடர்பான சிஏஜி அறிக்கை தற்போது ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.
இதனால் ராஜ்ய சபாவே மொத்தமாக முடங்கி உள்ளது. இந்த ரபேல் சிஏஜி அறிக்கை பாஜக அரசுக்கு சாதகமாக வந்து இருக்கிறது என்றுதான் கூற வேண்டும். இந்த அறிக்கையில் சில முக்கியமான விஷயங்கள் இடம்பெறவில்லை.
இந்த அறிக்கையில் இடம்பெறாத சில விஷயங்கள் நிறைய கேள்விகளை எழுப்பி உள்ளது. பல முக்கிய கேள்விகளுக்கு இதில் பதில் அளிக்கப்படவில்லை.
1. ரபேல் ஒப்பந்தம் பிரச்சனை ஆனதே, ஒரு விமானத்தின் தனிப்பட்ட விலை காரணமாகத்தான். ஆனால் இந்த சிஏஜி அறிக்கையில் ஒரு ரபேல் விமானத்தின் விலை என்ன என்று கூறப்படவில்லை.
2. காங்கிரஸ் அரசை விட 2.8% குறைவான விலையில் பாஜக அரசு ரபேல் ஒப்பந்தம் செய்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் காங்கிரஸ் செய்தது 126 விமானங்களுக்கான ஒப்பந்தம், பாஜக செய்தது 36 விமானங்களுக்கான ஒப்பந்தம். இதை ஒப்பிடும்போது கண்டிப்பாக பாஜகவின் விலை குறைவாகவே இருக்கும்.
3. இதனால் பாஜக ஒருவேளை 126 விமானங்களுக்கு அதே ரகசிய விலையில் ஒப்பந்தம் செய்திருந்தால் என்ன விலை இருக்கும் என்று இந்த அறிக்கையில் குறிப்பிடவில்லை. வெறுமனே 126 விமான கொள்முதலையும் 36 விமான கொள்முதலையும் இதில் ஒப்பிட்டு இருக்கிறார்கள்.
4. அதேபோல் வங்கி உத்தரவாதம் (bank guarantee) இல்லாமல் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதால் 7% சேமிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த சேமிப்பு இந்தியாவிற்கு பலன் அளிக்காமல் பிரான்ஸ் டாஸால்ட் நிறுவனத்திற்கே பலன் அளிக்கும். இதுகுறித்து அறிக்கையில் எதுவும் இல்லை.
5. இந்த ஒப்பந்தத்தில் பிரதமர் மோடி பேர பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டது குறித்து சிஏஜி அறிக்கையில் எந்த வார்த்தையும் இல்லை.
6. இந்த ஒப்பந்தத்தில் ஆப் செட் பார்ட்னர் எனப்படும், இந்திய ஒப்பந்த நிறுவனமாக ரிலையஸ் டிபன்ஸ் எதன் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டது. எதன் அடைப்படையில் எச்ஏஎல் நீக்கப்பட்டது என்பது குறித்த விவரங்கள் இல்லை.