ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே! கனடா பிரதமரின் குடுமியை பிடித்திருக்கும் ‘ஜக்மீத்சிங்’ - யார் இவர்?
டெல்லி: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியாவுக்கு எதிராக சலங்கை கட்டிவிட்டது போல கபடி விளையாட முயற்சித்து வாங்கிக் கட்டுவதன் பின்னணியில் இருப்பது 'காலிஸ்தான்' பயங்கரவாதிகளை ஆதரிக்கும் ஜக்மீத் சிங் தான். இந்த சிங்குக்கும் கனடா பிரதமர் ட்ரூடோவுக்கும் என்னதான் தொடர்பு?
நாடு பிரிவினையை எதிர்கொண்ட 1947-ம் ஆண்டு முஸ்லிம்கள் பெரும் எண்ணிக்கையில் இந்தியாவை விட்டு வெளியேறி பாகிஸ்தானில் தஞ்சமடைந்த வரலாறு இன்றளவும் நம்மிடையே போதிக்கப்பட்டு வருகிறது. அதேபோலவே பெரும் எண்ணிக்கையிலான சீக்கியர்கள், இந்தியாவை விட்டு வெளியேறி பாகிஸ்தான், கனடா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அமெரிக்கா 'அரசியல் அகதிகளாக' அடைக்கலமாகினர். அதன் பின்னரும் ஒவ்வொரு காலகட்டங்களில் சீக்கியர்கள் இந்தியாவை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் தஞ்சமடைவது தொடர்ந்து கொண்டே இருந்தது.

புதிய ஜனநாயகக் கட்சி தலைவர் ஜக்மீத்சிங்: அப்படி இந்தியாவில் இருந்து கனடாவுக்கு இடம் பெயர்ந்த பெற்றோருக்கு 1979-ல் பிறந்தவர்தான் ஜக்மீத் சிங். வழக்கறிஞராக தமது வாழ்க்கையைத் தொடங்கிய ஜக்மீத்சிங், மனித உரிமை செயற்பாட்டாளராக அடையாளப்படுத்தப்பட்டு அரசியலிலும் காலடி எடுத்து வைத்தார். 2011 கனடா பொதுத் தேர்தலில் குர்பாக்சிங் மால்கி என்பவரிடம் 539 வாக்குகளில் தோற்றுப் போனார் ஜக்மீத்சிங். பின்னர் ஒவ்வொரு படிநிலைகளாக அரசியலில் மேலே எழுந்து கனடாவின் எதிர்க்கட்சிகளில் ஒன்றான புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவராக 2017-ல் உயர்ந்தார்.

ஜஸ்டின் ட்ரூடோவின் பிரதமர் பதவி: சீக்கியர் ஒருவர் கனடாவின் பிரதான அரசியல் கட்சிகளின் தலைவராக இருக்கும் போது கனடா மக்கள் தொகையில் 2.1% இருக்கும் சீக்கியர்களின் ஆதரவை சொல்லவா வேண்டும்? 2021 கனடா பொதுத் தேர்தலில் ஜக்மீத் சிங் எனும் சீக்கியர் தலைமையிலான புதிய ஜனநாயகக் கட்சி மொத்தம் 25 இடங்களைக் கைப்பற்றியது. அந்த தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோ பிரதமராவதற்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. 2022-ல் ஜஸ்டின் ட்ரூடோ பிரதமராக நீடிப்பதற்கு 25 இடங்கள் பெற்ற ஜக்மீத்சிங் தலைமையிலான புதிய ஜனநாயகக் கட்சி ஆதரவு தந்தது. அதாவது ஜக்மீத் சிங் தலைமையிலான புதிய ஜனநாயகக் கட்சியின் பிடியில்தான் ட்ரூடோவின் பிரதமர் பதவி எனும் குடுமி சிக்கி இருக்கிறது.

பயங்கரவாதி பிந்தரன்வாலே ஆதரவாளர்: இந்தியாவுடன் நீண்டகாலமாக மோதல் போக்கை கடைபிடிக்கிறவர் ஜக்மீத்சிங். இந்தியாவில் சீக்கியர்கள் வாழும் பகுதிகளை ஒருங்கிணைத்து காலிஸ்தான் தனிநாடு அமைக்க வேண்டும் என்ற பிரிவினைவாத இயக்கத்தை பகிரங்கமாக ஆதரிக்கக் கூடியவர். ஒண்டாரியோ சட்டசபை பிரதிநிதியாக இருந்த போது காலிஸ்தான் தனிநாடு கோரி இந்திய ராணுவத்தால் அழித்தொழிக்கப்பட்ட பயங்கரவாதி பிந்தரன்வாலே 'ஜிந்தாபாத்' என முழங்கியவர் ஜக்மீத் சிங். 1984-ம் ஆண்டு இந்தியாவில் சீக்கியர் படுகொலை சம்பவத்தை இந்தியாவின் இனப்படுகொலை என பல கூட்டங்களில் குற்றம் சுமத்திய இந்திய தேசத் துரோகி ஜக்மீத்சிங். இத்தகைய பயங்கரவாத ஆதரவு ஜக்மீத் சிங்குக்கு 2013ம் ஆண்டு அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு விசா தர மறுத்தது.

ஜக்மீத்சிங்கின் குரல்: இத்தகைய சீக்கிய பயங்கரவாதத்தை முழுமையாக ஆதரித்து நிற்கும் ஜக்மீத்சிங்கின் குரலாகத்தான் ஜஸ்டின் ட்ரூடோ, இந்தியாவுக்கு எதிராக விளையாடிப் பார்த்து கொண்டிருக்கிறார். இப்போது பயங்கரவாதி நிஜ்ஜார் படுகொலையில் வெளிப்படையாக இந்தியா மீது பழிபோடுகிறவர்தான் ஜக்மீத்சிங். அப்புறம் என்ன "ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா" கதைதான் ஜஸ்டின் ட்ரூடோவின் கதை! அதனால்தான் இந்தியாவுக்கு எதிராக இப்படி சடுகுடு ஆடிப் பார்க்கிறார்! அந்தோ பரிதாபம்!












Click it and Unblock the Notifications