முடிந்துபோன விஷயம்.. கிளற வேண்டாம்.. பணமதிப்பிழப்பு வழக்கில் மத்திய அரசு வாதம்
டெல்லி: ரூ.500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த மோடியின் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை நடந்தது. இதில், நீதிமன்றம் முடிவெடுக்கக் கூடாது என்று மத்திய அரசு விவாதித்துள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தார்.
கருப்பு பணம், கள்ள நோட்டுக்களை ஒழிப்பது, பயங்கரவாத நிதியை தடுப்பது உள்ளிட்ட நோக்கங்களை அடிப்படையாக கொண்டு இந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்தது. அதேபோல், புதிதாக ரூ.500, 2 ஆயிரம் ரூபாய் தாள்களும் அறிமுகம் செய்யப்பட்டன.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை தவறானது என உத்தரவு போடுங்க... அடுத்த அறிவிப்பு வராது: ப.சிதம்பரம் வாதம்
ஏ.டி.எம் வாசல்களில் காத்திருந்த மக்கள்
மக்கள் வங்கிகளில் தங்கள் கையிருப்பில் இருந்த பணத்தை டெபாசிட் செய்வதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டு இருந்தன. அதேபோல், புதிய ரூபாய் தாள்கள் கிடைக்காமல் மக்கள் ஏ.டி.எம் வாசல்களிலும் வங்கிகளின் முன்பாகவும் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. இருந்தாலும் பல்வேறு நல்ல நோக்கங்களுக்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டதாக மத்திய அரசு தெளிவுபடுத்தியது.
57 ரிட் மனுக்கள்
இந்த நிலையில், பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவேக் நாராயண் சர்மா உள்ளிட்டோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் 57 ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கை தற்போது நீதிபதிகள் நசீர், கவாய், போபண்ணா, ராமசுப்பிரமணியன் மற்றும் நாகரத்னா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வருகிறது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ஆஜராகி பரபரப்பு வாதங்களை முன்வைத்தனர்.
ரிசர்வ் வங்கிக்கே அதிகாரம்
ப.சிதம்பரம் முன்வைத்த வாதத்தில், நட்டில் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுக்களை ரிசர்வ் வங்கிதான் திரும்பப் பெற முடியும். ரிசர்வ் வங்கிக்கே இந்த அதிகாரம் உள்ளது. ஆனால், இதனை மத்திய அரசு கேலிக்கூத்தாக்கியிருக்கிறது. தன்னிச்சையாக அறிவித்தது சரியான நடைமுறை இல்லை. மத்திய அரசின் முடிவுக்கு தடை விதித்தால்தான் மற்றொரு பண மதிப்பிழப்பு அறிவிப்பு வெளியாவதை தடுக்க முடியும்" என்று தனது வாதங்களை முன்வைத்தார்.
நீதிமன்றம் முடிவெடுக்கக் கூடாது
மத்திய அரசின் தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கட்ரமணி, பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மறு பரிசீலனை செய்யக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், முந்தைய காலத்திற்கு இழுத்து செல்வதன் மூலமோ.. இந்த விவகாரத்தில் பழைய நிலைக்கு கொண்டு செல்வதன் மூலமோ எந்த உறுதியான நிவாரணமும் கிடைக்கப்போவது இல்லை என்ற நிலையில், நீதிமன்றம் முடிவெடுக்கக் கூடாது" என்றார்.
செயல்படுத்திய விதம் தவறானது
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், நிர்ணையித்த இலக்குகளை அடைந்துவிட்டதாக நீங்கள் வாதாடுகிறீர்கள்.ஆனால் இதை செயல்படுத்திய விதம் தவறானது என்ற வாதங்களுக்கு தீர்வு கூற வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம். விதிகள் பின்பற்றப்பட்டதா? இல்லையா? என்று எங்களுக்கு காட்டுங்கள்" என்றனர். மேலும், ரிசர்வ் வங்கியிடம் ஆலோசனை நடத்திய பிறகுதான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதா? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அடுத்த கட்ட விசாரணை
இதற்கு பதிலளித்த அட்டர்னி ஜெனரல், அரசு எடுத்த கொள்கை முடிவுகளை பற்றி நீதிமன்றம் மறு ஆய்வு செய்வதை தவிர்க்க வேண்டும். ரிசர்வ் வங்கி சட்டம் 26(2) பணமதிப்பிழப்பு குறித்து அரசாணை வெளியிடுவதற்கு அதிகாரம் உள்ளது" என்றார். இந்த வழக்கில் பரபரப்பான வாதங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் வழக்கின் அடுத்த கட்ட விசாரணை வரும் டிசம்பர் 5 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.