தமிழகத்திற்கு 40 டிஎம்சி நீர் திறக்க வேண்டும்.. கர்நாடகாவுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு
டெல்லி:தமிழகத்திற்கு 40 டிஎம்சி தண்ணீர் வழங்க கர்நாடக அரசுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், ஜூன் மாதத்திற்கான 9.19 டிஎம்சி, ஜூலை மாதத்திற்கான 31.24 டிஎம்சி தண்ணீரை திறந்து விடவும் கர்நாடகாவுக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியி இன்று நடந்த காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 52வது கூட்டத்தில் உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிற்கும் கர்நாடகாவுக்கும் இடையே காவிரி விவகாரத்தில் தொடர்ந்து மோதல் இருந்து வருகிறது. தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய நீரைத் திறந்து விடாமல் கர்நாடகா பிடிவாதம் காட்டியே வருகிறது. இதற்கிடையே தான் இன்றைய தினம் டெல்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நடந்தது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பருவமழை பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், தற்போதைய நீர் இருப்பு நிலவரம் குறித்து ஆய்வு செய்ய 52வது காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் இன்று கூடியது. டெல்லியில் இப்போது தொடங்கியுள்ள இந்த கூட்டத்தில் காவிரி ஆற்றுப் படுகையில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர் இருப்பு அளவு, காவிரி ஆறுக்கு வரும் நீர் வரத்து மற்றும் படுகை மாநிலங்களின் விவசாய நடவடிக்கைகள் குறித்து விரிவாக மதிப்பீடு செய்யப்பட்டது.

தண்ணீர்
தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி என 4 மாநில அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர். காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் ஹல்தர் தலைமையில் நடந்த கூட்டத்தில், ஜூன் மாதத்திற்கான தங்களுக்குரிய நீர் ஒதுக்கீடான 9.19 டி.எம்.சி தண்ணீரில், எஞ்சிய பகுதியைக் கர்நாடகாவின் நீர்த்தேக்கங்களிலிருந்து உடனடியாகத் திறந்து விடுமாறு தமிழக அரசு வலியுறுத்தியது. இந்த மாதத்தில் இதுவரை சுமார் 2 டி.எம்.சி தண்ணீரை மட்டுமே கர்நாடகா திறந்துவிட்டுள்ளது.
அதே நேரத்தில், போதிய மழை பெய்யாதது மற்றும் தங்களது நீர்த்தேக்கங்களுக்கு மிகக் குறைந்த அளவிலேயே நீர் வரத்து இருப்பதைக் காரணம் காட்டி, கூடுதலாகத் தண்ணீரை விடுவிக்க இயலாது என்று கர்நாடகா இக்கூட்டத்தில் சொல்லியதாக தெரிகிறது.
இந்த நிலையில், தமிழகத்திற்கு 40 டிஎம்சி தண்ணீர் வழங்க கர்நாடக அரசுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், ஜூன் மாதத்திற்கான 9.19 டிஎம்சி, ஜூலை மாதத்திற்கான 31.24 டிஎம்சி தண்ணீரை திறந்து விடவும் கர்நாடகாவுக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
என்ன நடந்தது
கர்நாடகாவில் இருந்து தண்ணீர் திறந்து விடுவது தொடர்பான இப்பிரச்சனை, கடந்த வாரம் டெல்லியில் நடைபெற்ற காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழுவின் கூட்டத்திலும் விரிவாக விவாதிக்கப்பட்டது. அப்போது, ஜூன் மாதத்திற்குரிய ஒதுக்கீட்டைக் கர்நாடகா முறையாக வழங்கவில்லை என்று தமிழகம் புகார் தெரிவித்தது. ஆனால், கர்நாடகா தனது நீர்த்தேக்கங்களில் போதிய நீர் வரத்து இல்லை என்று கூறியது.
வலியுறுத்தல்
இரு மாநிலங்களின் கருத்துக்களைக் கேட்டறிந்த பின்னர், காவிரிப் படுகையின் நீர் இருப்பு நிலவரத்தை ஆய்வு செய்த ஒழுங்குமுறை குழு, இரு மாநிலங்களும் தங்களுக்குக் கிடைக்கும் தண்ணீரைச் சேமித்து வைத்து, குடிநீர்த் தேவைகளுக்கு முதலிடம் அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது. மேலும், தென்மேற்கு பருவமழை காலத்தின் பிற்பகுதியான ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நீர்ப் பற்றாக்குறை இன்னும் தீவிரமடையக்கூடும் என்பதால், நெல் சாகுபடிப் பரப்பளவை ஒதுக்குவதில் இரு மாநிலங்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றும் ஒழுங்குமுறை குழு எச்சரித்தது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு வழக்கத்தை விட மிகவும் குறைவாகப் பதிவாகியுள்ளதால், நீர்த்தேக்கங்களுக்கு வரும் நீரின் அளவும் கடுமையாகக் குறைந்துள்ளதாக கர்நாடக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கர்நாடகாவின் நான்கு முக்கிய நீர்த்தேக்கங்களுக்கு தற்போது நாளொன்றுக்கு சுமார் 1,000 கன அடி நீர் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது. இதனால் அங்கே நீர் இருப்பு குறைவாக இருப்பதால், அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது..
மேகதாது
இது தவிரக் கர்நாடகா அரசு திட்டமிட்டுள்ள மேகதாது நீர்த்தேக்கத் திட்டம் குறித்து ஆராய ஒரு தனி நடுவர் மன்றத்தை அமைக்க வேண்டும் என்ற முக்கிய கோரிக்கையையும் காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழக அரசு எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications