கர்நாடகாவின் 'வறட்சி' பிடிவாதம்- தீவிரமான காவிரி சிக்கல்! செப்.18-ல் மேலாண்மை ஆணையம் அவசர கூட்டம்!
டெல்லி: காவிரி பிரச்சனையில் கர்நாடகா காங்கிரஸ் அரசு தொடர்ந்து பிடிவாதம் காட்டும் நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசர கூட்டம் வரும் 18-ந் தேதி கூடுகிறது.
தமிழ்நாட்டுக்கான உரிய காவிரி நீரை திறந்துவிட கர்நாடகா மறுத்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டின் காவிரி டெல்டாவில் குறுவை நெற்பயிர்கள் கருகிக் கொண்டிருக்கின்றன. காவிரி டெல்டா விவசாயிகள் செய்வதறியாமல் விழி பிதுங்கி நிற்கின்றனர்.

காவிரி மேலாண்மை ஆணையம்: டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் வினாடிக்கு 24,000 கன அடி நீரை தமிழ்நாடு கேட்டது. ஆனால் கர்நாடகா திட்டவட்டமாக இதனை தர மறுத்தது. இதையடுத்து வினாடிக்கு 5,000 கன அடி நீரை மட்டும் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. இதற்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றம் போனது. கர்நாடகாவோ வினாடிக்கு 3,000 அல்லது 4,000 கன அடிநீர் என சொற்ப அளவில் நீரை திறந்துவிட்டது.
கர்நாடகா பிடிவாதம்: உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு வரும் 21-ந் தேதி விசாரணைக்கு வர உள்ளது. இதனிடையே காவிரி ஒழுங்காற்று ஆணையமும் கூட தமிழ்நாட்டுக்கு மேலும் 15 நாட்களுக்கு வினாடி 5,000 கன அடி நீரை திறந்துவிட பரிந்துரைத்தது. ஆனால் கர்நாடகாவோ வறட்சி நிலவுகிறது; தண்ணீரை திறக்க முடியாது என்றது. இன்னொரு பக்கம், கன்னட விவசாயிகள் தமிழ்நாட்டுக்கு எதிரான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால் கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியது. இந்தக் கூட்டத்திலும் தமிழ்நாட்டுக்கு நீர் திறக்க முடியாது என சொன்னது கர்நாடகா. அதேநேரத்தில் டெல்லிக்குப் போன கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார், மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து காவிரி பிரச்சனை குறித்து பேசியிருந்தார்.

செப்.18-ல் அவசர கூட்டம்: இந்நிலையில் தற்போது காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசர கூட்டம் வரும் 18-ந் தேதி கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் வறட்சி நிலவுகிறது; 132 ஆண்டுகளில் இல்லாத வறட்சி; அதனால் பல மாவட்டங்களை வறட்சி பாதித்தது என அறிவித்துவிட்டோம் என்கிற பல்லவியை பாடுகிறது. இன்னொரு பக்கம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. இந்த சூழ்நிலையில் வரும் 18-ந் தேதி காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசர கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications