வரலாறு காணாதது இது.. அதி வேகமாக நம்பகத்தன்மையை இழந்து வரும் சிபிஐ
Recommended Video
டெல்லி: அரசியல் படுகொலையாளிகள் முதல் ஊழல்வாதிகள் என்று பலதரப்பட்ட ஒயிட் காலர் கிரிமினல்களை மக்கள் மன்றத்தில் அடையாளப்படுத்திய பெருமை இந்திய புலனாய்வு அமைப்புகளுள் ஒன்றான சி பி ஐ –க்கு உண்டு என்றால் அது மிகையல்ல. இந்தியாவின் சுதந்திரத்திற்கு பிறகு மத்தியப் புலனாய்வு அமைப்பு என்றழைக்கப்பட்ட அமைப்புதான் இந்த சி பி ஐ.
மாநில காவல்துறையினரால் கண்டுபிடிக்க முடியாத பெருங்குற்றங்கள், அரசியல் அழுத்தம் உள்ள வழக்குகள், அரசியல் தலைவர்களின் கொலைகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளை வெற்றிகரமாக நடத்தி தண்டனை வாங்கி கொடுத்ததன் மூலம் ஒரு நேர்மையான புலனாய்வு நடைபெற வேண்டுமா அழையுங்கள் சி பி ஐ – யை என்று பெயர் வாங்கிய அந்த அமைப்பு இப்போது மக்களிடையே நம்பகத்தன்மையை இழந்து வருகிறது.
இந்தியாவில் உள்ள பிற தன்னிச்சையான அமைப்புகளான நீதித்துறை, தேர்தல் ஆணையம் போன்றவை எப்படி அதிகாரப் போட்டியிலும், அரசியல் தலையீடுகளாலும் நம்பிக்கையை இழந்து வருகிறதோ அதே நிலை இப்போது சி பி ஐ –க்கும் ஏற்பட்டிருப்பது துரதிர்ஷ்டவசமானது.
அத்துமீறும் அதிகாரப் போட்டி
சி பி ஐ - ல் அதிகாரப் போட்டி அத்து மீறி நடைபெறுகிறது என்பதையும் ஆளும்கட்சியின் அரசியல் அழுத்தம் அளவுக்கு அதிகமாக இருக்கிறது என்பதையும் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. சி பி ஐ இயக்குனராக இருந்த அலோக் வெர்மாவை பிடிக்காத மத்திய அரசு அவரை பதவி நீக்கம் செய்வதற்காக அவரையும் சிறப்பு இயக்குனராக இருந்த ராகேஷ் அஸ்தானாவையும் கட்டாய விடுப்பில் அனுப்பி, பாரபட்சமற்ற நடவடிக்கை எடுத்தது போல காட்டிக் கொண்டது. .
பறிக்கப்பட்ட பதவி
வெர்மா நீதிமன்றத்தை நாடியதை அடுத்து அவருக்கு மீண்டும் பதவி வழங்கப்பட்டது. ஆனாலும் சி பி ஐ இயக்குனரை நியமிப்பதற்கான குழு மறுபடியும் கூடி அலோக் வெர்மாவின் பதவியை பறித்தது. இந்தக் குழுவில் இடம் பெற்றிருந்த எதிர்க்கட்சி தலைவர் மல்லிகர்ஜூன கார்கே வெர்மாவின் பதவி பறிக்கப்பட்டதை எதிர்த்தார். இருப்பினும் அவர் தீயணைப்புத் துறை தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
வெர்மாவின் மீது சில குற்றசாட்டுகளை முன்வைக்கும் அரசு ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.கே. பட்நாயக் முன்னிலையில் ஊழல்தடுப்பு கண்காணிப்பு ஆணையர் மேற்கொண்ட விசாரணையில் குற்றசாட்டுகளுக்கான ஆதாரம் கிடைத்துள்ளதாக குறிப்பிடுகிறது. இந்த ஆதாரங்களின் அடிப்படையில்தான் அலோக் வெர்மா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அரசு கூறுகிறது.
சந்தர்ப்பம் தரலையே
ஆனாலும் எதிர்க்கட்சி தலைவர் கூறியது போன்று அலோக் வெர்மாவுக்கு அவர் மீதான குற்றசாட்டுகள் குறித்து விளக்கமளிக்க சந்தர்ப்பம் அளித்திருக்க வேண்டும். அல்லது குற்றசாட்டுகளின் மீது நடவடிக்கை எடுக்காமல் அவரை வேறு துறைக்கு மாற்றம் செய்திருக்கவும் கூடாது. அரசின் இந்த நிலைப்பாட்டை எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வந்தன.
பாயும் எதிர்க்கட்சிகள்
குறிப்பாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால், சிபிஐ அமைப்பின் தலைவர் லோக்பால் சட்டப்படி நியமிக்கப்பட்டவர். அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க, மோடி அரசுக்கு எந்தச் சட்டம் அதிகாரம் கொடுத்தது என்றும் எதை மறைக்க மோடி அரசு முயற்சிக்கிறது என்றும் கேள்வி விடுத்துள்ளார். மோடியின் கவனத்தைப் பெற்ற மற்றொரு அதிகாரி மீது உள்ள தீவிரமான ஊழல் புகார்கள் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. இதில் பாஜகவுக்கும், அதன் முக்கியத் தலைவர்களுக்கும் உள்ள நேரடித் தொடர்பை மறைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது என்று குற்றம்சாற்றியிருந்தார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி.
இஷ்டத்திற்கு இடமாற்றம்
இந்நிலையில், அலோக் வெர்மா மீது ஊழல் புகார் கூறி வெர்மாவோடு கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட அஸ்தானாவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவரோடு சேர்த்து மூத்த அதிகாரிகள் 3 பேரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்
தற்போது மக்களின் நம்பிக்கையை இழந்து வரும் சி பி ஐ அமைப்பு மீண்டும் தனது நம்பிக்கையை பெற வேண்டுமானால் முதலில் சி பி ஐ இயக்குனரை பிரதமர், தலைமை நீதிபதியால் நியமிக்கப்படும் நீதிபதி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் தேர்ந்தெடுக்கும் முறையை முதலில் மாற்றவேண்டும்.
அரசியல் சார்பு போக வேண்டும்
அரசியல் சார்பில்லாத, சாயமில்லாத ஒரு சுதந்திரமான குழு அமைக்கப்பட்டு அந்தக் குழு சி பி ஐ இயக்குனரை தேர்வு செய்ய வேண்டும் அதோடு சி பி ஐ -ன் விசாரணை அழுத்தங்களின்றி, சார்புகளின்றி நடைபெறுகிறதா என்பதையும் கண்காணிக்க வேண்டும். அதற்கேற்ற சட்ட திருத்தங்களும் கொண்டு வரப்படவேண்டும். செய்வார்களா நமது ஆட்சியாளர்கள்.