ஏர்செல் மேக்சிஸ் வழக்கு.. ப.சிதம்பரம், கார்த்திக்கு முன்ஜாமீன் வழங்கியது டெல்லி சிபிஐ நீதிமன்றம்
Recommended Video
டெல்லி: ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்ஜாமீன் வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்துக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
கடந்த 2006-ஆம் ஆண்டு மத்திய நிதி அமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்த போது மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம் ஏர்செல் நிறுவனத்தில் ரூ 3,500 கோடி முதலீடு செய்தது.
இந்த முதலீடு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவின் அனுமதி பெறாமல் மேற்கொள்ளப்பட்டதாகவும் இதற்கு கார்த்தி சிதம்பரமும் உதவி செய்தார் என்றும் அதற்கு பிரதிபலனாக அவரது நிறுவனங்களுக்கு பணம் கைமாறியதாகவும் கூறப்படுகிறது.
அமலாக்கத் துறை
இந்த நிலையில் சிபிஐயும் அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. இருவருக்கும் எதிராக அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த வழக்கில் ப.சிதம்பரமும் கார்த்தியும் தொடர்ந்த முன்ஜாமீன் மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி ஓபி ஷைனி முன்பு, கடந்த இரு தினங்களுக்கு முன்னர் விசாரணைக்கு வந்தது.
தீர்ப்பு தேதி மாற்றம்
அப்போது ப. சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது. ப.சிதம்பரம், கார்த்தியை கைது செய்து விசாரித்தால்தான் பல உண்மைகள் வெளியே வரும். ஏர்செல் மேக்சிஸ் வழக்கு தேசநலன் சார்ந்தது என சிபிஐ வாதம் செய்தது. இந்த நிலையில் நீதிபதி ஷைனி, முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தேதியை வரும் 5-ஆம் தேதிக்கு மாற்றி உத்தரவிட்டார்.
சிபிஐ வாதம்
இந்த நிலையில் ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு மீது சிபிஐ சிறப்பு நீதிபதி ஓ.பி. ஷைனி 2 மணிக்கு தீர்ப்பளித்தார். அதற்கு முன்னதாக ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என சிபிஐ வாதம் செய்தது.
நிராகரித்தார்
அத்துடன் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் தர உச்சநீதிமன்றம் மறுக்கப்பட்டதை கருத்தில் கொள்ள வேண்டும் என சிபிஐ வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார். அதை நீதிபதி ஓ.பி. ஷைனி நிராகரித்தார்.
பிணைத் தொகை
இதையடுத்து ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு டெல்லி சிபிஐ நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அதே வேளையில் விசாரணை அமைப்புகளுக்கு இருவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தியாவை விட்டு வெளிநாடுகளுக்கு செல்லக் கூடாது, ஒரு லட்சம் பிணைத் தொகை செலுத்துமாறும் உத்தரவிடப்பட்டது.