CBI vs CBI: அலோக் வெர்மா வழக்கில் காரசார விவாதம்.. மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் கிடுக்குப்பிடி!
சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா மத்திய அரசுக்கு எதிராக தொடுத்த வழக்கில் இன்று காரசாரமான விவாதம் நடந்தது.
டெல்லி: சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா மத்திய அரசுக்கு எதிராக தொடுத்த வழக்கில் இன்று உச்ச நீதிமன்றத்தில் காரசாரமான விவாதம் நடந்தது.
சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா கட்டாய விடுப்பில் செல்ல வேண்டும் என்று மத்திய அரசால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சில வாரம் முன் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவிற்கு எதிராக அலோக் வெர்மா வழக்கு தொடுத்தார்.
சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா மற்றும் சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா இடையே நிலவி வந்த பிரச்சனையை அடுத்து இவர்கள் கட்டாய விடுப்பில் செல்ல மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. இதனால் மத்திய அரசு சிபிஐ அமைப்பை கட்டுப்படுத்துகிறதா என்ற கேள்வி எழுந்தது .

வழக்கு தொடுத்தார்
இதையடுத்து சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா தனது கட்டாய விடுப்பிற்கு எதிராக தொடுத்த வழக்கில் கடந்த ஒரு மாதமாக உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்துகிறது.

முக்கிய விசாரணை
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி சஞ்சன் கிஷான் கவுல் ஆகியோர் முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா மீதான விசாரணை குறித்து விஜிலென்ஸ் அமைப்பு ஏற்கனவே விசாரணை அறிக்கை தாக்கல் செய்து இருந்தது. அந்த விசாரணை அறிக்கை மீதும், மத்திய அரசின் நடவடிக்கை சரியாக என்பதன் மீது கேள்விகள் எழுப்பப்பட்டு இருக்கிறது. இது தொடர்பான விசாரணைதான் இன்று நடந்தது.

விவாதம் தொடங்கியது
நேற்று மத்திய அரசு சார்பில் வழக்கறிஞர் கேகே வேணுகோபால் இந்த வழக்கில் வாதம் வைத்தது போலவே இன்றும், சிபிஐ அமைப்பை கட்டுப்படுத்தும் அதிகாரம் அரசுக்கு இருக்கிறது. நாங்கள் சிபிஐ அதிகாரிகளை நீக்கவில்லை. அவர்களுக்கு கட்டாய விடுப்பு மட்டுமே அளித்து இருக்கிறோம். அதனால் இது சிபிஐ மீதான நடவடிக்கையாக இருக்காது, என்று கூறியது.

நாரிமன்
இதற்கு அலோக் வெர்மா தரப்பு வழக்கறிஞர் நாரிமன், அது எப்படி இது நடவடிக்கையாக இருக்காது என்று சொல்கிறீர்கள். சிபிஐ இயக்குனரை கட்டாய விடுப்பில் செல்ல சொல்லிவிட்டு அந்த இடத்தில் நாகேஸ்வரராவை நியமனம் செய்துள்ளீர்கள். இதனால், சிபிஐ இயக்குனரை நீங்கள் நீக்கிவிட்டீர்கள் என்றுதானே அர்த்தம் என்று கேட்டார்.

ஒரே நபர்தான்
அதேபோல் இந்தியாவில் ஒரே தலைமை நீதிபதிதான் இருக்க முடியும் இரண்டு தலைமை நீதிபதி இருக்க முடியாது. அதேபோல்தான் ஒரு சிபிஐ இயக்குனர்தான் இருக்க முடியும். ஆக்டிங் இயக்குனர் என்று இன்னொரு சிபிஐ இயக்குனரை நியமிக்க முடியாது. அவரது இரண்டு ஆண்டு பதவிக்காலம் முடியும் வரை அவர் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க முடியாது. இதனால் மத்திய அரசு எடுத்து நடவடிக்கை தவறானது என்று கூறினார்.

வழக்கு முடிந்தது
இதையடுத்து மத்திய அரசிடம் தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார், அதன்படி 4 மாதங்களாக சிபிஐ அமைப்பிற்குள் இந்த பிரச்சனை இருக்கிறது. அப்படி இருக்கும் போது, என் இப்போது நடவடிக்கை எடுத்தீர்கள். அதுவும் விஜிலென்ஸ் அமைப்பின் அனுமதி இல்லாமல் ஏன் நடவடிக்கை எடுத்தீர்கள் என்று கேள்வி எழுப்பினார். இந்த காரசார விவாதத்தை தொடர்ந்து வழக்கு விசாரணை நிறைவு பெற்றதாக நீதிபதிகள் அறிவித்தனர்.












Click it and Unblock the Notifications