CBSE Class 10 results: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது! 93 சதவீதம் பேர் தேர்ச்சி
டெல்லி: 2026 ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10- ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (CBSE) அதிகாரப்பூர்வ இணையதளமான cbse.gov.in-ல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த முடிவுகளை எப்படி பார்க்கலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
இன்றே தேர்வு முடிவுகள் வெளிவரலாம் என சமூக வலைத்தளங்களில் பல தகவல்கள் பரவினாலும், வாரியம் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடாமல் இருந்த நிலையில் தற்போது திடீரென முடிவுகள் வெளியாகிவிட்டன.

CBSE 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் , பிப்ரவரி 17 அன்று தொடங்கி மார்ச் 11, 2026 வரை நடைபெற்றன. மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை cbse.gov.in, results.cbse.nic.in, cbseresults.nic.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மூலம் சரிபார்க்கலாம்.
மதிப்பெண் பட்டியல்களைப் பதிவிறக்க மாணவர்கள் கீழ்க்கண்ட எளிய வழிமுறைகளைப் பின்பற்றலாம்: முதலில், CBSE-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும். அடுத்து, "CBSE Class 10 Result 2026" என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
அதன் பிறகு, உங்கள் ரோல் நம்பர், பள்ளி எண், அட்மிட் கார்டு ஐடி மற்றும் பிறந்த தேதியை உள்ளிடவும். விவரங்களைச் சமர்ப்பித்ததும், திரையில் உங்கள் தேர்வு முடிவுகளைக் காணலாம். எதிர்காலப் பயன்பாட்டிற்காக, இந்தத் தற்காலிக மதிப்பெண் பட்டியலைப் பதிவிறக்கம் செய்து அச்சிட்டு வைத்துக் கொள்வது நல்லது.
தற்போது முதல் வாரிய தேர்வு முடிவுகளே வெளியாகியுள்ளன. இது அனைத்து மாணவர்களுக்கும் கட்டாயமானது. இரண்டாம் வாரிய தேர்வு விருப்பத் தேர்வாக வழங்கப்படுகிறது. மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களை மேம்படுத்திக் கொள்ள இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த தேர்வு மே 15 ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறும். பாடத்திட்டத்தில் எவ்வித மாற்றமும் இன்றி நடத்தப்படும் இந்த தேர்வில் அதிகபட்சமாக 3 பாடங்களில் மதிப்பெண் மேம்பாட்டிற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
முதல் தேர்வில் இரு பாடங்களில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் கம்பார்ட்மென்ட் பிரிவில் வைக்கப்பட்டு அவர்கள் இந்த இரண்டாவது தேர்வில் பங்கேற்கத் தகுதி உடையவர்கள் ஆவர். ஆனால் 3 அல்லது அதற்கு மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்த அல்லது தேர்வுக்கு வராத மாணவர்கள் இரண்டாவது தேர்வை எழுத முடியாது. அவர்கள் 2027 ஆம் ஆண்டு நடக்கும் முதன்மைத் தேர்வில் மட்டுமே பங்கேற்க முடியும்.
இந்த ஆண்டு புள்ளிவிவரங்களின்படி, மொத்தம் 25,08,319 மாணவர்கள் தேர்வு எழுதப் பதிவு செய்திருந்தனர். இதில் 14,08,546 மாணவர்களும், 10,99,773 மாணவிகளும் அடங்குவர்.
நாடு முழுவதும் 8,075 தேர்வு மையங்களில் 83 பாடங்களுக்குத் தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்த ஆண்டு 93.70 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் மாணவிகள் 94.99 சதவீதமும் மாணவர்கள் 92.6 சதவீதமும் தேர்ச்சி பெற்றிருந்தனர்.
திருவனந்தபுரம், விஜயவாடா ஆகிய நகரங்கள் 99.79 சதவீதம் பெற்று அதிக தேர்ச்சி விகிதங்களை பெற்றுள்ளது. கடந்த 2025-ஆம் ஆண்டு மே 13 அன்று முடிவுகள் வெளியான நிலையில், அப்போது 93.66 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
டிஜிலாக்கர் (DigiLocker) தனது பக்கத்தில், CBSE 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும் என அறிவித்திருந்தது. "முடிவுகள் வெளியாகும் நாள் வரை காத்திருக்காமல், உங்கள் டிஜிலாக்கர் கணக்கை இப்போதே உருவாக்கி தயாராக இருங்கள்" என டிஜிலாக்கர் அறிவுறுத்தியுள்ளது. APAAR ID இல்லாத மாணவர்களும் தங்கள் கணக்குகளை உருவாக்கலாம்.
CBSE உடன் இணைக்கப்பட்ட APAAR ID வைத்திருப்பவர்கள், முடிவுகள் வெளியானதும், டிஜிட்டல் மதிப்பெண் பட்டியல்களை "Issued Documents" பிரிவில் எளிதாகப் பெற முடியும்.
முடிவுகள் விரைவில் வெளியாகும் என்பதால், மாணவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளங்களை தொடர்ந்து சரிபார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தேர்வு முடிவுகள் வெளியானதும், டிஜிலாக்கர் வழியாகவும் அவற்றை எளிதாகப் பெறலாம்.












Click it and Unblock the Notifications