CBSE Open Book Exam: இனி 9ம் வகுப்பு மாணவர்கள் புத்தகம் பார்த்து தேர்வு எழுதலாம்.. அமல்படுத்தும் சிபிஎஸ்சி
டெல்லி: தேசிய கல்வி கொள்கையின் அடிப்படையில் வரும் 2026-2027 கல்வியாண்டில் சிபிஎஸ்இ பள்ளியில் பயிலும் 9 ம் வகுப்பு மாணவர்கள் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுத அனுமதிக்கப்பட உள்ளனர்.
மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்சி) கீழ் நாடுமுழுவதும் 29,009 பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் சுமார் 2.6 கோடி மாணவ - மாணவிகள் படித்து வருகின்றனர். இதற்கிடையே, தேசியக் கல்விக் கொள்கை-2020 அடிப்படையில் பாடத்திட்டம், தேர்வு முறை உட்பட பல்வேறு அம்சங்களில் மாற்றங்களை சிபிஎஸ்இ வாரியம் மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் சிபிஎஸ்இ பள்ளிகளில் பயிலும் 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு, புத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுதும் நடைமுறை கொண்டுவரப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த திட்டம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.
இந்நிலையில் தான் சிபிஎஸ்சி பள்ளிகளில் தேசிய கல்வி கொள்கையின் ஒருபகுதியாக 9 ம் வகுப்பு மாணவ-மாணவிகள் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதுவதற்கு அனுமதி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி வரக்கூடிய 2026-27 கல்வியாண்டில் 9 ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு புத்தகம் பார்த்து தேர்வு எழுதும் திட்டம் செயல்பாட்டுக்கு வர உள்ளது.
இதற்கான ஒப்புதல் கடந்த ஜூன் மாதம் சிபிஎஸ்இ நிர்வாக குழு (CBSE Governing Body)தரப்பில் வழங்கப்பட்டுள்ளது. இந்த குழு தான் சிபிஎஸ்இ வாரியத்தில் முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரம் படைத்தது. அதன்படி ஒவ்வொரு பருவத்துக்கும் மொழிப்பாடங்கள், கணிதம், அறிவியல், சமூகவியல் உள்ளிட்ட பாடங்களுக்கு 3 எழுத்து தேர்வுகள் நடத்தப்படும்.
அந்தவகையில் 9 முதல் 12-ம்வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு புத்தகம் பார்த்து தேர்வு எழுதும் நடைமுறையைக் (ஓபிஇ) கொண்டு வருவதற்கு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் இனி 9 ம் வகுப்பு மாணவ-மாணவிகள் தேர்வுக்கான பாடத்திட்டங்களை மனப்பாடம் செய்ய வேண்டாம். அவர்கள் பாடப்புத்தகங்கள், நூலகங்களில் எடுத்த குறிப்புகள் அல்லது பள்ளிகள் சார்பில் வழங்கிய குறிப்புகள் உள்ளிட்டவற்றை தேர்வறைக்கு எடுத்து சென்று அதனை பார்த்து தேர்வு எழுதலாம்.
இந்த புத்தகம் பார்த்து தேர்வு எழுதும் நடைமுறை மாணவ-மாணவிகள் மனப்பாடம் செய்வதை குறைப்பதை நோக்கமாக கொண்டது. அதுமட்டுமின்றி குறிப்பிட்ட கான்செப்ட்டுகளை புரிந்து கொண்டு தேர்வு எழுதும் முறையை ஊக்குவிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ளது.
மேலும் தேர்வுகளுக்கான கேள்விகள் என்பது மாணவர்களின் புத்திசாலித்தனம், பாடத்தை எப்படி புரிந்து கொண்டனர் என்பதை காட்டும் வகையில் கேள்வி கேட்கப்படும். இதனால் புத்தகமே கையில் இருந்தாலும் கேள்வித்தாளில் இருக்கும் கேள்விகளை படித்து அதனை புரிந்து கொண்டால் மட்டுமே அதற்கான விடையை புத்தகத்தில் இருந்து எடுத்து எழுத முடியும். இதனால் இந்த தேர்வும் கூட சவாலாகவே இருக்கும் என்று சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications