வயநாடு நிலச்சரிவை.. தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது! காரணம் காங்கிரஸ்தான்.. கைகாட்டிய மத்திய அரசு
டெல்லி: வயநாடு நிலச்சரிவில் ஏறத்தாழ 300க்கும் அதிகமானோர் மண்ணில் புதைந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த இயற்கை பேரிடரை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்த நிலையில், இதற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்திருக்கிறது.
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த 30ம் தேதி அதிகாலையில் வயநாடு மாவட்டம் மேப்பாடி அடுத்த சூரல்மலை பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவு ஏற்பட்டு இரண்டு மணி நேரத்தில், அதாவது அதிகாலை 4.30 மணியளவில் மேம்பாடிக்கு அருகில் உள்ள பகுதிகளில் மற்றொரு நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் மேப்பாடி, சூரல்மலை, முண்டக்கை, வைத்திரி, வெள்ளேரிமலை, பொத்துகலு உள்ளிட்ட கிராமங்கள் கடுமையாக பதிக்கப்பட்டன.

மக்கள் தூங்கிக்கொண்டிருந்தபோது இந்த நிலச்சரிவு ஏற்பட்டதால், என்ன நடக்கிறது என்பதை உணர்வதற்கு கூட அவர்களுக்கு நேரம் கிடைக்கவில்லை. மேற்குறிப்பிட்ட பகுதியில் இருந்த வீடுகள் அனைத்தும் மண்ணால் மூடப்பட்டிருக்கின்றன. விவரமறிந்த மீட்டு படையினர் முழு வீச்சில் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர். தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு துறையினர், விமானப் படையினர் உள்ளிட்டோர் மீட்பு பணியில் ஈடுபட்டிருக்கின்றனர்
தற்போதுவரை 300க்கும் அதிமானோர் பத்திரமாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். உயிரிழப்பை பொறுத்தவரை தொடக்கத்தில் 100-150 என்கிற அளவில்தான் இருந்தது. ஆனால் தற்போதைய நிலவரப்படி சுமார் 300க்கும் அதிகமான சடலங்கள் மீட்கப்பட்டிருக்கின்றன என கேரள அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. தோண்ட தோண்ட சடலங்கள் வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
கனமழை தொடர்ந்து வருவதால் சாலைகள், பாலங்கள் அடித்து செல்லப்பட்டிருக்கின்றன. இதனால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டிருக்கிறது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில், 3 கிராமங்களை சேர்ந்த 1000 பேர் மண்ணுக்கு அடியில் புதைந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அதேபோல 100க்கும் மேற்பட்டோரின் நிலை என்னவென்று தெரியவில்லை.
கேரளா இதுவரை பார்த்திராத இயற்கை பேரழிவாக இது இருக்கிறது. எனவே இந்த துயரத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று கேரள மாநில அரசும், காங்கிரஸ் கட்சியும் வலியுறுத்தி வருகின்றன. கேரள அரசு இந்த பேரழிவை மாநில பேரிடராக அறிவித்திருக்கிறது. ஆனால் மத்திய அரசுக்கு கேரள அமைச்சரவை கடிதம் எழுதியும், இதுவரை மத்திய அரசு இது குறித்து வாய் திறக்கவில்லை.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவிக்க பிரதமர் நரேந்திர மோடி இன்று வயநாட்டிற்கு வருகிறார். இப்படி இருக்கையில் வயநாட்டில் ஏற்பட்ட இயற்கை பேரிடரை, தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என்று மத்திய அரசு தரப்பிலிருந்து பதில்கள் வெளியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதாவது கடந்த 2013ம் ஆண்டு அப்போதை பிரதமர் மன்மோகன் சிங், இயற்கை பேரிடரை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என விளக்கமளித்திருந்தார். இந்த விளக்கத்தை மேற்கோள்காட்டி, தற்போது வயநாடு நிலச்சரிவையும் இயற்கை பேரிடராக அறிவிக்க முடியாது என மத்திய அரசு தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications