மாநகராட்சி, நகராட்சி, கிராமங்களில் புதிய மின் இணைப்பு வாங்க போறீங்களா.. மத்திய அரசு நல்ல செய்தி
டெல்லி: 2020-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மின்சார (நுகர்வோர் உரிமைகள்) விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது. இதன்படி நாட்டின் பெருநகரங்களில் புதிய மின்இணைப்பு அளிப்பதற்கான கால அளவு 7 நாட்களில் இருந்து 3 நாட்களாக குறைக்கப்பட்டிருக்கிறது. நகர் பகுதிகளிலும் இந்த நாட்கள் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது.
2020-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மின்சார (நுகர்வோர் உரிமைகள்) சட்டப்படி, புதிய மின் இணைப்பை விரைவாக வழங்குவதற்கு 150 கிலோவாட் வரையிலான சுமைகளுக்கு டிமாண்ட் கட்டணங்கள் கணக்கிடப்படுவது இல்லை. புதிய மின் இணைப்பு வழங்கவும், தற்போதுள்ள இணைப்பை மாற்றவும், மெட்ரோ நகரங்களில் அதிபட்சம் 7 நாட்கள் ஆகும். நகராட்சி பகுதிகளில் என்றால் 15 நாட்களும், பேரூராட்சி மற்றும் கிராமப்புறங்களில் 30 நாட்களில் மின் இணைப்பு வழங்கப்படும். இந்த சட்டம் தான் தற்போது நடைமுறையில் இருக்கிறது.

புதிய மின் இணைப்பு பெற விரும்புவோருக்கு மத்திய அரசு நல்ல செய்தி கூறியுள்ளது. இதற்காக 2020ம் ஆண்டு கொண்டு வந்த சட்டத்தையே திருத்தி உள்ளது. சென்னை, டெல்லி, மும்பை, ஹைதராபாத், பெங்களூர், கொச்சி, அஹமதாபாத், புனே, கோவை உள்பட நாட்டின் பல்வேறு பெருநகரங்களில் 3 நாட்களில் புதிய மின்சார இணைப்பு வழங்கப்பட வேண்டும் என்று சட்டத்தை மத்திய அரசு திருத்தி உள்ளது. நகர் பகுதியிலும், கிராமப்பகுதியிலும் மின் இணைப்பு பெறுவதற்கான நாட்களை குறைத்துள்ளது.
3 நாட்களில் மின் இணைப்பு: 2020-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மின்சார (நுகர்வோர் உரிமைகள்) விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் செய்துள்ள குறித்து மத்திய மின்சார அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் மத்திய அரசு கூறியுள்ளதாவது: மின் இணைப்பு பெறுவது தொடர்பான புதிய விதிமுறைகளின்படி, பெருநகரங்களில் புதிய மின்இணைப்பு அளிப்பதற்கான கால அளவு 7 நாட்களில் இருந்து 3 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.
இதர நகராட்சி பகுதிகளில், கால அளவு 15 நாட்களில் இருந்து 7 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. புதிய மின் இணைப்பு அளிப்பதற்கு கிராமப்புற பகுதிகளில் கால அளவு 30 நாட்களில் இருந்து 15 நாட்களாகவும் குறைக்கப்பட்டுள்ளது. மலைப்பகுதி கிராமங்களில், புதிய மின்இணைப்பு அளிப்பதற்கான கால அளவு 30 நாட்களாக தொடர்ந்து நீடிக்கும்.
இந்த புதிய திருத்தங்களால், வீட்டு கூரைகளில் சூரிய மின்உற்பத்தி (சோலார்) தகடுகளை நிறுவும் பணி வேகமாகவும், எளிதாகவும் ஆக்கப்பட்டிருக்கிறது அதன்படி, 10 கிலோவாட் வரை திறன் கொண்ட சூரிய சக்தி தகடுகளை நிறுவ தொழில்நுட்ப சாத்தியக்கூறு ஆய்வு செய்வதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
10 கிலோவாட்டுக்கு மேல் திறன் கொண்ட தகடுகளை நிறுவும்போது, தொழில்நுட்ப சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வதற்கான கால அளவு 20 நாட்களில் இருந்து 15 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. 5 கிலோவாட் வரையிலான சூரியசக்தி கட்டமைப்புகளை வினியோக நிறுவனமே தனது சொந்த செலவில் நிறுவுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மின்சார வாகனங்களை 'சார்ஜ்' செய்வதற்கு தனி மின்இணைப்புகளை பெறவும் நுகர்வோருக்கு வசதி செய்யப்பட்டிருக்கிறது. அடுக்குமாடி குடியிருப்புகளில் பொதுப்பகுதி மின்சார பயன்பாடும், ஜெனரேட்டர் பயன்பாடும் தனியாக கணக்கிடப்படும். தாங்கள் பயன்படுத்திய மின்சாரத்துக்கும், மீட்டரில் காட்டும் அளவுக்கும் ஒத்துப்போகவில்லை என்று நுகர்வோர்கள் மின்வாரியத்தில் புகார் தெரிவிக்கலாம். அப்படி புகார் அளித்த உடன், சம்பந்தப்பட்ட மின்வினியோக நிறுவனம் 5 நாட்களுக்குள் கூடுதல் மீட்டர் பொருத்த வேண்டும்" இவ்வாறு மத்திய அரசு அந்த அறிவிப்பில் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications