சீனாவுக்கு நேரடி விமான சேவை.. பிரதமர் மோடியின் பிளான்.. ஏர் இந்தியா, இண்டிகோவுக்கு பறந்த உத்தரவு
டெல்லி: ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ போன்ற விமான நிறுவனங்களை அடுத்த மாதம் முதல் சீனாவுக்கு நேரடி விமான சேவைகளை மீண்டும் தொடங்கும்படி மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. கோவிட் தொற்று மற்றும் எல்லை மோதல்களால் கடந்த ஐந்து ஆண்டுகளாக நேரடி விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்த நிலையில் மீண்டும் விமானசேவை தொடங்குகிறது. ஆகஸ்ட் 28 அன்று சீனாவின் தியான்ஜினில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்வதால் இந்த மாற்றம் நடந்துள்ளது
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், "அமெரிக்கா முதலில்" (America First) என்ற கொள்கையின் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளை டார்கெட் வைத்து செயல்படுகிறார். முதலில் சீனா தான் இதில் அதிகமாக பாதிக்கப்பட்டிருந்தது. இதனால் சீனா புதிய வர்த்தகம் செய்ய நாடுகளை தேட வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

டிரம்ப் முடிவு
இதனால் இந்தியாவை சீனா ஒரு பெரிய சந்தையாகவும், வர்த்தக கூட்டாளியாக கருதி நெருங்கி வந்தது. இந்த சூழலில் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கியதற்காக இந்தியா மீது அதிக வரிகளை விதித்தார்.டிரம்ப்பின் கொள்கை இந்தியாவையும் இப்போது பாதித்துள்ளது. டிரம்பின் செயலுக்கு சீனா கடும் கண்டனமும் தெரிவித்தது. சீனாவும்,ரஷ்யாவும் இந்தியாவிற்கு ஆதரவாக குரல்களை எழுப்பி வருகின்றன.
சீனாவிற்கு நேரடி விமான சேவை
இந்த சூழலில் தான் ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ போன்ற விமான நிறுவனங்களை அடுத்த மாதம் முதல் சீனாவுக்கு நேரடி விமான சேவைகளை மீண்டும் தொடங்கும்படி மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. சீனாவின் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ள உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை அவர் சந்திக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிங்கப்பூர் சுற்றி செல்ல வேண்டியதிருந்தது
முன்னதாக கோவிட்-19 தொற்று காரணமாக 2020 ஆம் ஆண்டு முதல் சீனா இந்தியா என இரு நாடுகளுக்கும் இடையே நேரடி வணிக விமானங்கள் நிறுத்தப்பட்டிருந்தது . இதனால் பயணிகள் ஹாங்காங், சிங்கப்பூர் அல்லது பாங்காக் போன்ற நகரங்கள் வழியாக சுற்றிச் செல்ல வேண்டியிருந்தது. இது பயண நேரத்தையும் செலவையும் வெகுவாக அதிகரித்து வந்தது.
மோடி சீனா பயணம்
இந்நிலையில் இந்திய சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகள், ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ போன்ற உள்நாட்டு விமான நிறுவனங்களை, குறுகிய அறிவிப்புடன் சீனாவுக்கு விமானங்களை இயக்க தயாராகுமாறு அறிவித்துள்ளனர். இந்த விமான சேவைகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு SCO உச்சி மாநாட்டின் போது அல்லது அதற்குப் பிறகு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விமான சேவைகள் எப்படி இருந்தது
கோவிட்-19 தொற்றுநோய்க்கு முன், ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ சீன நகரங்களுக்கு நேரடி விமானங்கள் இயங்கி வந்தன. அதேபோல், ஏர் சீனா, சைனா சதர்ன் மற்றும் சைனா ஈஸ்டர்ன் ஆகிய சீன விமான நிறுவனங்களும் இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு சீனாவில் இருந்து விமானங்களை இயக்கி வந்தது.
காலதாமதமாகும்
அதேநேரம் இந்தியா சீனா இடையிலான நேரடி விமான சேவை அடுத்த மாதம் தொடங்கும் என்றாலும் தேதிஇன்னும் உறுதியாகவில்லை என்றும், பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதால் சற்று தாமதங்கள் ஏற்படலாம் என்று விமான போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விமான சேவை மீண்டும் தொடங்குவதன் மூலம் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளில் ஒரு தற்காலிக முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது உறுதியாகி உள்ளது. 2020-ஆம் ஆண்டு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த எல்லை மோதலுக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மோசமாகியது.அந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீன வீரர்களும் இறந்தார்கள் என்றாலும் அதிகாரப்பூர்வமாக சீனா இறந்தவர்கள் விவரங்களை அப்போது அறிவிக்கவில்லை.
ஜி ஜின்பிங்குடன் மோடி சந்திப்பு
அந்த சம்பவத்திற்கு பிறகு கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுக்கு பிறகு இந்திய அரசு சீன நாட்டினருக்கு சுற்றுலா விசாக்களை வழங்கத் தொடங்கி உள்ளது. அதே நேரத்தில், ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்கியதற்கு பதிலடியாக அமெரிக்கா இந்தியப் பொருட்களுக்கு 50% கூடுதல் வரி விதித்ததால், அமெரிக்காவுடனான இந்தியாவின் உறவில் ஒருவித சிக்கல் நிலவுகிறது. இந்த சூழலில் தான் சீனாவிற்கு நேரடி விமான சேவை மீண்டும் தொடங்க இருக்கிறது. ஆகஸ்ட் 28 அன்று சீனாவின் தியான்ஜினில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்வதால் இந்த மாற்றம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. பிரதமர் மோடி சீனாவில் பயணம் செய்யும் போது சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications