கோடிக்கணக்குல அள்ளுங்கனு சொல்லப்படாது! ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களுக்கு ஆப்பு! கடிவாளம் போடும் அரசு!
டெல்லி : ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான விளம்பரங்களை ஒளிபரப்பு செய்வதை தவிர்க்குமாறு தனியார் சாட்டிலைட் சேனல்கள் இணையதளங்கள் மற்றும் ஓடிபி பிளாட்பாரங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆன்லைன் ரம்மி, ட்ரீம் லெவன் உள்ளிட்ட கிரிக்கெட் சூதாட்டம் உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டங்கள் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் பண இழப்பு மற்றும் உயிரிழப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது.
குறிப்பாக ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் நடிகர்கள் நடிக்க கூடாது எனவும் அந்த விளம்பரங்களை ஒளிபரப்பக் கூடாது எனவும் கோரிக்கை வலுத்து வந்தது. இதற்கான நடவடிக்கைகளை எடுக்க பலதரப்பினரும் மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி வந்தனர்.

சூதாட்ட விளம்பரங்கள்
இந்நிலையில் இந்தியாவில் ஆன்லைன் சூதாட்டங்களை விளம்பரப்படுத்தும் விளம்பரங்களை வெளியிடவோ, ஒளிபரப்பவோ வேண்டாம் என தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து மத்திய அரசு, செய்தி இணையதளங்கள், ஓடிடி ஆப்கள் மற்றும் தனியார் சேட்டிலைட் தொலைக்காட்சிகளுக்கு ஆன்லைன் ரம்மி மற்றும் சூதாட்டம் தொடர்பான விளம்பரங்களை ஒளிபரப்ப வேண்டாமென அறிவுறுத்தியுள்ளது.

மத்திய அரசு தடை
அதன்படி ஆன்லைன் சூதாட்டம், ஆப் ஷேர், டிரேடிங் சம்பந்தப்பட்ட விளம்பரங்களை செய்து இணையதளங்கள் ஓட்டுட்டி தளங்கள் மற்றும் சேட்டிலைட் தொலைக்காட்சிகள் தவிர்க்குமாறு கடுமையாக அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது அரசின் இந்த அறிவுரையை மீறும் சாட்டிலைட் தொலைக்காட்சிகள் மற்றும் சேனல்களுக்கு சட்டப்படி அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

பினாமி செய்தி நிறுவனங்கள்
சாட்டிலைட் சேனல்கள் அல்லாது டிஜிட்டல் மீடியா மற்றும் ஓடிடி தளங்களுக்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் தனியாக ஒரு ஆலோசனை வழங்கியுள்ளது. அதிலும் இதே போல அம்சங்கள் இடம் பெற்று இருக்கும் நிலையில் இந்தியாவில் உள்ள பார்வையாளர்களை குறி வைத்து ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களை ஒளிபரப்ப வேண்டாம் என கேட்டுக்கொள்ளபட்டுள்ளது. ஒரு சில ஆன்லைன் சூதாட்ட தளங்கள், தாங்கள் இயக்கி வரும் பினாமி செய்தி இணையதளங்களின் மூலம் விளம்பரங்களில் வாடிக்கையாளர்களை இழுக்க முயற்சித்து வருவதாகவும் செய்தி இணையதளங்களின் லோகோக்கள் ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் லோகோக்களுடன் ஒத்துப் போவதாகவும் சம்பந்தப்பட்ட புதிய தளங்கள் இந்திய சட்டங்களின் கீழ் பதிவு செய்யப்படவில்லை எனவும் மத்திய அரசு கூறியுள்ளது.

பட்டியல் வெளியீடு
ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் செய்திகள் மற்றும் விளம்பரங்கள் மூலம் ஆன்லைன் சூதாட்டத்தை ஊக்குவிப்பது தெரியவந்துள்ளதாகவும், ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் சில உண்மையான விளையாட்டு இணையதளங்கள் மற்றும் செய்தி நிறுவனங்களின் மூலம் வாடிக்கையாளர்களை கவர முயற்சி செய்வதாக நுகர்வோர் விவகாரங்கள் துறை தெரிவித்துள்ளது. மேலும் ஆன்லைன் சூதாட்டத்திற்காக பினாமி செய்திகளை பயன்படுத்தும் ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் குறித்த பட்டியலையும் மத்திய அரசு வெளியிட்டு இருக்கிறது.












Click it and Unblock the Notifications